அழிவுக்கு இட்டுச் செல்லும் அறிக்கையை கைவிடுங்கள் என்கிறார் மஹிந்த
இலங்கையின் கட்டமைப்பை ஒற்றையாட்சி மற்றும் யுனிட்டரி என்ற அடிப்படையில் இருந்து சமஷ்டி என்ற அடிப்படையை நோக்கி நகர்த்துவது மட்டுமே நல்லாட்சியாளர்களின் நோக்கமாக இருக்கின்றது என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
இனவாத ரீதியில் ஆட்சி அலகுகளைப் பிரிப்பதற்கும் அவற்றுக்கான விரிவான அதிகாரங்களை வழங்குவதற்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
எனவே இந்த அழிவுக்கு இட்டுச் செல்லக்கூடிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளை கைவிட்டு மக்களுக்கு வாக்களித்தவாறு அரசியலமைப்பு திருத்தத்தை மட்டும் செய்வதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு நான் அரசாங்கத்தை கோருகின்றேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருக்கின்றார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்று பாராளுமன்றத்தினால் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம்திகதிக்கு முன்னதாக தேர்தல் முறைமையை மாற்றி ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகவே நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுத அளித்திருந்தது.
முழு அரசியலமைப்பையும் மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை கிடைக்கவில்லை. இந்த இடைக்கால அறிக்கையில் காணப்படும் கீழ் வரும் விடயங்களுக்கு நாம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்க மாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
1. சிங்கள மொழியில் ஏக்கிய என்ற சொற்பிரயோகத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவதாகவும், யுனிட்டரி என்ற ஆங்கில வார்த்தையை நீக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனூடாக பெரும்பான்மை மக்கள் இலங்கையை ஒற்றையாட்சி நாடாக கருதினாலும் சர்வதேசத்தின் முன்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாக இருக்க முடியாது. மக்களை ஏமாற்றுவதற்கு கொண்டுவந்துள்ள தந்திரமான யோசனையை நாங்கள் கண்டிக்கின்றோம்.
2. இந்த இடைக்கால அறிக்கையின் நான்காவது பக்கத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரு அலகாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியலமைப்பின் ஐந்தாவது பிரிவின்படி இலங்கை பூமியில் 25 மாவட்டங்கள் உள்ளன. அந்த முறைமையை மாற்றி ஒரு குறிப்பிட்ட உறுதியான எந்தவிடயத்தையும் தெரிவிக்காத மாகாணங்களின் ஊடாக ஏதோ ஒன்று செய்வதற்கு முயற்சிக்கின்றனர்.
இதன் மூலம் இவர்கள் எதற்கு முயற்சிக்கின்றர் என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கின்றோம்.
3. இந்த இடைக்கால அறிக்கையில் மாகாணங்களினால் செய்யக்கூடியவற்றை மாகாணங்களுக்கே வழங்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு எண்ணக்கருவின் ஊடாகவே 1972 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கில் பிரிவினைவாதிகள் தனிநாட்டைக் கோரி வருகின்றனர் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
4. மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் இந்த அதிகாரங்கள் ஏனைய அனைத்து மாகாணங்களினதும் அனுமதி இல்லாமல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்ற முடியாத ஒரு விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி மாகாணசபை பிரதிநிதிகளும் உள்ளடக்கத்துடன் இருக்கும் இரண்டாவது சபையின் அனுமதியும் இல்லாமல் பாராளுமன்றத்தினால் தேசிய கொள்கைகளை முன்னெடுக்க முடியாத வகையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒத்திசைவு பட்டியலை நீக்குவதற்கும் அந்த அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு கொடுப்பதற்கும் சமஷ்டி நாட்டுக்கு உரிய முறையில் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளை குறைக்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
5. மாகாண ஆளுநர்களுக்கு காணப்படும் நிறைவேற்ற அதிகாரத்தை குறித்த மாகாணத்தின் அமைச்சரவைக்கு வழங்கவும் எந்த நேரமும் மாகாண அமைச்சரவையின் ஆலோசனைகளின் படி செயற்படுவதற்கும் முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஆளுநர் ஒருவர் ஒரு மாகாணத்தில் அவசர நிலைமை காணப்படுவதாக மத்திய அரசாங்கத்திற்கு அறிவிக்க முடியாதவாறும் ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி மாகாணசபையினால் நிறைவேற்றப்படும் ஒரு பிரேரணைக்கு அனுமதி அளிப்பதோ அல்லது அதுதொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் இருக்கின்ற காலம் இரண்டு வராங்களினால் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு வாரங்கள் கடந்துவிட்டால் இயல்பாகவே அந்தப் பிரேரணைக்கு அனுமதி கிடைத்துவிட்டதாக கருதப்படுவதாக தெரிவிப்பதன் மூலம் மாகாணசபைகள் மீதான மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைமையானது இந்தியாவிலிருந்து பெற்றப்பட்டதாகும்.
இந்திய அரசியலமைப்பில் 201 ஆவது பிரிவின் படி மாநில அரசாங்கங்கள் நிறைவேற்றும் எந்தவொரு சட்டமும் எந்தக்காரணமும் இன்றி ஜனாதிபதியினால் நிராகரிக்கப்படலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறது.
ஆனால் எமது நாட்டில் ஜனாதிபதிக்கு அவ்வாறான அதிகாரம் இருந்ததில்லை. எனவே மாகாணசபைகள் தொடர்பாக நிறைவேற்று அதிகாரத்திற்கு காணப்படும் அதிகாரங்களை மேலும் குறைக்கும் இடைக்கால அறிக்கையின் யோசனைகளை நாம் எதிர்க்கின்றோம்.
6. தற்போதைய அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் அது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் கீழ் ஜனாதிபதி அல்லது மத்திய அரசாங்கத்திற்கு காணப்படுகின்ற காணி தொடர்பான அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு மாகாணத்தில் காணப்படுகின்ற ஒரு காணியை மத்திய அரசாங்கத்தின் தேவைக்காக கோரினால் அதனை மாகாணசபை நிராகரித்தால் அந்தப் பிரச்சினையை முதலில் மத்தியசபைக்கு அனுப்பவும் பின்னர் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு எந்த மாற்று ஏற்பாடுகளும் இல்லை.
இந்தியாவில் மத்திய அரசாங்கத்தின் தேவையான காணியொன்றை மாநிலம் ஒன்றிலிருந்து பெறுவதற்கு அதிகாரம் இருக்கிறது. எனவே காணி தொடர்பில் தற்போது காணப்படும் ஏற்பாடுகளில் எந்தமாற்றமும் செய்யப்படக்கூடாது.
7. 55 முதல் 45 பேரைக் கொண்டதாக மாகாணசபை பிரதிநிதிகள் உள்ளடங்கிய இரண்டாவது சபையொன்றை அமைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது சபையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் நிறைவேற்றப்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை வரையறுப்பதாகவும் அதுதொடர்பாக நிறைவேற்று அதிகாரம் ஒன்றை . மாகாண சபைகளுக்கு வழங்குவதாகவும் தெரிகிறது.
இந்த விடயத்தில் இந்திய அரசியலமைப்பின் 249ஆவது பிரிவுக்கு சமமான அதிகாரங்கள் இல்லாவிடின் இலங்கைக்கு இரண்டாவது சபையொன்று அவசியம் இல்லை என்பது எமது கருத்தாகும்.
8. அனைத்து சிறு குழுக்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு இடமளிக்கக்கூடிய பிரதேச நிதித்துவவாரி தேர்தல் முறைமையின் கீழ் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் வீதமானது 40 வீதமாக இருக்கும் போது இனவாதக்குழுக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக சிறுபான்மை தொகுதிகள் மற்றும் கலப்பு தொகுதிகளை உருவாக்குவதற்கும் யுத்தத்தினால் வெளிநாடுகளுக்கு சென்ற மற்றும் யுத்தத்தின் பின்னரும் இலங்கைக்கு வராதவர்களை இடம்பெயர்ந்தவர்களாக கருதி வடமாகாணத்தின் மேலதிக பாராளுமன்ற ஆசனங்களை ஒதுக்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது போன்று இலங்கை அரசியலுக்குள் இனவாதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதேசநிதித்துவ முறைமையின் படி தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்காலத்தின் பிரகாரம் மாவட்ட மட்டத்தில் அல்லாமல் மாகாணமட்டத்தில் தெரிவு செய்யப்படுவதை நாம் ஏற்கவில்லை.
இதற்கு முன்னர் அரசியலமைப்பு நிர்ணயசபை வெளியிட்ட ஆவணங்களில் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தாலும் அந்தத் தலைப்பானது இந்தப் புதிய யோசனையில் உள்ளடக்கப்படாமைக்கு பொலிஸ் சேவையை ஒன்பதாக பிரித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க 13 திருத்தத்தில் ஏற்பாடுகள் இருக்கின்றமை காரணமாக இருக்கலாம்.
தற்போது தேசிய பொலிஸ் சேவையானது நாடு முழுவதும் செயற்படும் விதத்திலேயே தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பது எமது கருத்தாகும்.
எனவே தற்போதைய அரசியலமைப்பில் ஒன்பதாவது அத்தியாயத்தில் முதலாவது உப பிரிவில் காணப்படும் ஏற்பாடானது யதார்த்திற்கு ஏற்புடையது என திருத்தம் செய்யப்படவேண்டும்.
அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களை நீக்கி புதிதாக அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குதல், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கியதன் பின்னர் பிரதமருக்கு சில அதிகாரங்களை வழங்குதல், தேர்தலின் பின்னர் குறிப்பிட்ட காலம் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாதவாறு ஏற்பாடுகளை முன்வைத்தல் உள்ளிட்ட எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பல்வேறு யோசனைகள் இந்த இடைக்கால அறிக்கையில் இருக்கின்றபோதிலும் அவை இந்த அறிக்கையில் பிரதான நோக்கங்களுக்கு தொடர்புபடாமையினால் அவை தொடர்பில் நாம் தற்போது எதுவும் பேசவில்லை.
தற்போதைய அரசியலமைப்பில் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் 9ஆவது பிரிவை அகற்றுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது இவர்களின் தற்போதைய முதன்மை நோக்கம் அல்ல என்பது தெளிவாகின்றது.
அரசியலமைப்பின் 9ஆவது பிரிவு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மாற்றமானது இறுதி நேரத்தில் நீக்கிக்கொள்ளப்பட்டமையானது சங்க சபையை ஏமாற்றி நாட்டின் ஏக்கிய அல்லது யுனிட்டரி தன்மையை பேணுவதற்கு மேற்கொள்ளப்படும் போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதுபோன்று நல்லாட்சியாளர்களின் சமஷ்டி நோக்கத்திற்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தாமல் பெரும்பான்மை மக்களை ஏமாற்றுவதற்காக இறுதி நேரத்தில் நீக்கிக்கொள்ளக்கூடிய வாறான மற்றுமொரு யோசனையும் உள்ளது.
அரசியலமைப்பின் 7ஆவது பிரிவின் படி தேசிய கீதத்தில் தமிழ் மொழியையும் இணைக்கவேண்டும் என்ற யோசனையே அதுவாகும். இதுபோன்று இறுதி நேரத்தில் கைவிடுவது போன்று முன்வைப்பதற்காக பல்வேறு யோசனைகள் இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாம் அரசியல் மற்றும் தந்திரங்கள் தொடர்பான ஒரு குழுவினருடனேயே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதை புதிதாக கூறவேண்டிய அவசியம் இல்லை.
தற்போது நல்லாட்சியாளர்களின் இலக்கானது பௌத்தத்திற்கான முதலிடம் மற்றும் தேசிய கீதம் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மாற்றுவது அல்ல.
மாறாக இலங்கையின் கட்டமைப்பை ஒற்றையாட்சி மற்றும் யுனிட்டரி என்ற அடிப்படையில் இருந்து சமஷ்டி என்ற அடிப்படையை நோக்கி நகர்த்துவது மட்டுமே நல்லாட்சியாளர்களின் நோக்கமாக இருக்கின்றது என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
அதனால் இனவாத ரீதியில் ஆட்சிப் அலகுகளைப் பிரிப்பதற்கும் அவற்றுக்கான விரிவான அதிகாரங்களை வழங்குவதற்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது.
எனவே இந்த அழிவுக்கு இட்டுச் செல்லக்கூடிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளை கைவிட்டு மக்களுக்கு வாக்களித்தவாறு அரசியலமைப்பு திருத்தத்தை மட்டும் செய்வதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு நான் அரசாங்கத்தை கோருகின்றேன்.