தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கருணாநிதி நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 26). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மிட்டாய் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும், தென்திருப்பேரை மாவடிபண்ணையை சேர்ந்த மாரியப்பன்–நாராயண வடிவு தம்பதியின் மகள் ஆனந்திக்கும்(21) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர் செந்தில்குமார் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்து வந்தார். எனவே அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்திருப்பேரை மாவடிபண்ணையில் உள்ள தனது மாமனாரின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது செந்தில்குமார், தனது தங்கை ராதாவையும்(18) தன்னுடன் அழைத்து சென்றார்.
நேற்று மாலையில் செந்தில்குமார், ஆனந்தி, ராதா மற்றும் ஆனந்தியின் தாயார் உள்ளிட்ட அனைவரும் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர்.
அவர்கள் அனைவரும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக செந்தில்குமார், அவருடைய தங்கை ராதா ஆகிய இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதனால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அனைவரும் கூச்சலிட்டனர். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய ராதாவை மீட்டனர்.
பின்னர் சிறிது நேரத்தில் செந்தில்குமாரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சில வினாடிகளில் செந்தில்குமார், ராதா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ஆற்றில் மூழ்கி பலியான செந்தில்குமார், ராதா ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 2 மாதத்தில் மனைவியின் கண் எதிரே புதுமாப்பிள்ளை, தங்கையுடன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.