மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேக்கரி கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீபத்தில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
புனேவின் கொண்ட்வா பட்ரக் பகுதியில் வெதுப்பகம் ஒன்று செயற்பட்டு வந்தது. அங்கு இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் உள்ளே சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க முயன்றனர். ஆனால், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் முதலில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததும் உள்ளே நுழைந்த தீயணைப்புத்துறையினர் தொழிலாளர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் 6 தொழிலாளர்களும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பேக்கரி வெளிப்புறமாக பூட்டப்பட்டதே தொழிலாளர்கள் உயிரிழக்க காரணம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.