யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ.சு.கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்கள் பகிரங்கமாக ஒலிக்கவிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்விலேயே புலிகளின் கீதங்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பரவி வருகின்றன.
‘விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை கைத்தொலைபேசியில் வைத்திருந்தமைக்காகவும், புலிகளின் இலட்சினையை பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்தமைக்கும் இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் கட்சிக் கூட்டம் ஒன்று நடைபெறும் போது புலிகளின் கீதங்கள் பகிரங்கமாக ஒலிக்கவிடப்பட்டுள்ளன. இங்கு என்ன நடக்கின்றது?’ என ஒரு சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இதேவேளை, ‘உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ.சு.கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் போது புலிகளின் கீதங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன’
என ஒரு சாரார் அதை சாதாரணமாகவும் பதிவிட்டுள்ளனர்.
எனினும், தேர்தல் பரப்புரை கூட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களை ஒலிக்க விடுவது தேர்தல் விதிமுறை மீறல் மாத்திரமல்ல சட்டவிரோதமும் கூட என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
யாழில்.நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடிகள் சின்னங்கள் போன்றவற்றை உபயோகப் படுத்துவது சட்டவிரோதமானதே. அது தேர்தல் விதிமுறை மீறல் என்பவற்றுக்கு அப்பால் அது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்..