கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டனில் உயர்நிலைப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், புலிக்கொடியை தாங்கிச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் நடக்கும் பல்கலாசார கூட்டத்தில், மத்திய இரண்டாம் நிலைப் பாடசாலையில் கற்கும், குமார் மார்க்கண்டு என்ற 12ம் வகுப்பு மாணவன், கடந்த இரண்டு ஆண்டுகளாக புலிக்கொடியைத் தாங்கிச் சென்றிருந்தார்.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த ஆண்டுக்கான கூட்டத்தில், அவரை புலிக்கொடியுடன் வருவதற்கு பாடசாலை நிர்வாகம் தடைவிதித்திருந்த்தாக, ரொறன்ரோ சன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இந்த மாணவன் தாங்கிச் சென்ற புலிக்கொடியை, விடுதலைப் புலிகளின் கொடியுடன் சம்பந்தப்படுத்தி சர்ச்சைக்குட்படுத்தியதால், இந்த ஆண்டு, அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் கொடிகளை மட்டும் அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக பாடசாலையின் அதிபர் ஜிம் ரொபட்சன் தெரிவித்துள்ளார்.
தாம் மாணவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதை விரும்பவில்லை என்று பாடசாலை அதிபர் கூறியுள்ள போதும், விடுதலைப் புலிகளின் கொடிக்கும், தமிழர்களின் கொடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குமார் மார்க்கண்டு தெரிவித்துள்ளார்.
எமது கொடியைக் கூடக் கொண்டு வரமுடியாது என்றால் எமது கலாசாரத்தை எப்படி நாம் பகிர்ந்து கொள்ள முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி கூட்டத்தில் சக மாணவர்களுடன் தாம் பேசியதாகவும், அவர்கள் கொடியைக் கொண்டு வருவதில் எந்தப் பிரச்சனையுமில்லை என்று கூறியதாகவும் குமார் மார்க்கண்டு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கூட்டத்தில் தமிழர்களின் கொடி பொறிக்கப்பட்ட ரிசேர்ட்டு சென்றிருந்த போது, அதைக் கழற்றுமாறு ஆசிரியர் ஒருவர் தமக்கு உத்தரவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.