பெண்ணொருவருக்கு கையடக்கத்தொலைபேசி மூலம் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) அனுப்பிய 16 வயது நிரம்பிய உயர்வகுப்பு மாணவனொருவன் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கிருந்து அம்மாணவன் கண்டி அரசினர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் பதுளை தெல்பத்தை பெருந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தெல்பத்தை தோட்டத்தை சேர்ந்த மேற்படி மாணவன் அதே தோட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு காதல் தொடர்பான குறுந்தகவல் செய்தியொன்றை அப்பெண்ணின் கையடக்கதொலைபேசிக்கு அனுப்பியுள்ளான்.
இக்குறுந்தகவல் பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வரவே ஆத்திரங்கொண்ட அவர்கள் மாணவனை வரவழைத்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
தாக்கப்பட்ட மாணவன் ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமான படியினால் கண்டி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி, சம்பவம் குறித்து பதுளைப் பொலிஸார் மூவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண்ணாவார். பதுளை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.