பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் – நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இசை – இளையராஜா. ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர். இப்படத்துக்காக தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய பாடலொன்றை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார். தணிக்கையில் நாச்சியார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு பாலா இயக்கியுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியானது.
இந்நிலையில் நாச்சியார் படத்தை நடிகர் சிவகுமார் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலைக் காட்டிய வித்தை.
வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலைத் தொட்டாலும் நகரச் சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு balanced திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் come back ஐ வாழ்த்தி வரவேற்போம்.
ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ… ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்… அடடா…
நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைத்தான் கண்டு பிரமித்தேன்.
சூப்பர் போலிஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா… ) ஒளிப்பதிவு பிரமாதம்.
முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது.
எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார். உயிர்நாடியே இசைதான்.
கள்ளமறியாத பிஞ்சு உள்ளங்களின் வெள்ளைமன காதலையும், ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதல் செய்யும்போது குழந்தைத்தனமான குறும்புகளையும், நேரில் காணும்போது கோபத்தைச் செல்லமாய் காட்டி காணாதபோது தவியாய் தவித்து, என்னவன் எங்கோ தவிக்கிறான் என்று உணரும் நேரம் திசையறியாத பயணத்தை அழுகையுடன் தொடங்கிய அரசியின் அன்பும்… அவளை ஒரு குழந்தையாக பரிவுடன் பார்த்து அவளுக்காக தன் ஊன்உயிர் அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்யும் காத்தவராயனையும் தமிழ் சினிமா லேசில் மறக்காது.
கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்….. என்று அறிக்கையில் கூறியுள்ளார்.