ரெமோ படத்தில் பெண் வேடத்துக்காக 4 மணி நேரம் ‘மேக்கப்’ போட்டனர். கஷ்டப்பட்டு நடித்தேன்’’ என்று சிவகார்த்திகேயன் கூறினார்.
ரெமோ சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் படம், இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் ஒன்றிலும் நடிக்கிறார். அவரது முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
டைரக்டர்கள் ஷங்கர், மோகன்ராஜா, பொன்ராம், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-‘‘ரெமோ படத்தின் கதை எனக்கு பிடித்தது. ஆனால் இதில் பெண் வேடம் போட்டுநடிப்பதுதான் சிரமமாக இருந்தது.
இந்த வேடத்துக்காக 10 கிலோ எடை குறைத்தேன். தினமும் அதிகாலையில் 4 மணிநேரம் ‘மேக்கப்’ போட வேண்டி இருந்தது. புருவத்தில் இருந்த முடியை நீக்கினார்கள்.
வலித்தது. தலையில் கூந்தலை உருவாக்கி 50 ‘ஹேர்பின்’களை குத்தினார்கள். இடுப்பை கிள்ளினார்கள். பெண் வேடத்தில் வெளியே வருவதற்கும் தயக்கமாக இருந்தது.
அந்த மேக்கப்பில்நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பை பார்க்க வந்த பலருக்கு பெண்வேடத்தில் இருப்பது நான்தான் என்று தெரியவில்லை.
விசாகப்பட்டினத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது படப்பிடிப்பை பார்க்கவந்தவர்கள் படக்குழுவினரிடம் என்னை பார்த்து கதாநாயகியின் பெயர் என்ன? என்று கேட்டு நச்சரித்தார்கள். படப்பிடிப்பில் யாரோ ஒருவர் என் இடுப்பை கிள்ளி விட்டுப்போனார்.
தினமும் மேக்கப்பை கலைப்பதற்கே 2 மணி நேரமானது. நகைச்சுவை நடிகராக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன். எதிர்பாராத விதமாக கதாநாயகனாகி விட்டேன்.
இந்த படத்தை பினாமி மூலம் நான்தான் தயாரிக்கிறேன் என்று தகவல் பரவி உள்ளது. அதில் உண்மையில்லை. ஆர்.டி.ராஜாதான் தயாரிப்பாளர்.
மோகன்ராஜா இயக்கத்தில் நான் நடிக்கும் அடுத்த படத்தையும் இவர்தான் தயாரிக்கிறார். ரசிகர்களுக்கு பிடிக்கும் அனைத்து அம்சங்களும் ரெமோ படத்தில் இருக்கிறது. பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.’’இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.