நாட்டின் பல பிரதேசங்களில் பெற்றோலுக்கான தட்டுப்பாடு நேற்றும் நிலவியதனால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.
எனினும் நெருக்கடியில்லாத வகையில் பெற்றோலை விநியோகிக்க முடியுமெனவும் பெற்றோல் கொள்கலனைக் கொண்டுவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐ.ஓ.சி. நிறுவனம் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து கொண்டு வந்த பெற்றோலின் தரம் உறுதிசெய்யப்படவில்லை. எனவே அவ்வெண்ணெய்க் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதுடன் அதற்கு பதிலாக மற்றுமொரு
எண்ணெய்க்கப்பலை அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. ஆகவே அக்கப்பல் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினாலேயே பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே நேற்று முன்தினம் மாலை வேளையில் திடீரென பெற்றோல் பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றன.
மேலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டும் இருந்தன. அத்துடன் பெற்றோலித்துறை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வதந்தி பரவியமையினால் பெற்றோல் பெறுவதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடித்ததையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை பெற்றோல் கொண்டு வரும் கப்பல் எதிர்வரும் நாளை திங்கட்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அது வரையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பெற்றோலை தட்டுப்பாடின்றி விநியோக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் நேற்றும் கொழும்பு உட்பட பல பகுதிகளில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவியமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஏனைய எரிபொருட்களின் விநியோகம் வழமை போன்று இடம்பெற்றது.
அத்துடன் நேற்றுக் காலை முதல் பெற்றோல் விநியோகம் சாதாரணமாக நடைபெற்றதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேவையற்ற பீதி இடம்பெறாதவகையில் வழமைபோன்று பெற்றோலிய விநியோகம் இடம்பெறும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பெற்றோல் ஏற்றி வரும் கப்பல் நாட்டை வந்தடையும் வரையில் பாவனைக்குத் தேவையான பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.