பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவை சரிவர இயங்காததால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்கள் இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் சரிவர இயங்காததால் அவற்றின் பயனாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தரவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ முடியவில்லை.
கடந்த இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த பிரச்சினையால் சமூக வலைதள செயல்பாடுகள் பெரும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் ஏதும் தெரியாமலும், வாட்சப்பில் அனுப்பப்பட்டுள்ள புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய முடியாததால் இந்த சமூக வலைதளங்களை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய மூன்றும் பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்குவதால் அவற்றின் சர்வரில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பொதுவாக சமூகவலைதளங்கள் முடங்கும் போது பிரச்சனை உடனடியாக சரிசெய்யப்படும் நிலையில், இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.