திருப்பூரில் குடிபோதையில் இருந்த இளைஞருக்கும் போக்குவரத்து போலீஸாருக்கும் இடையே நடந்த கைகலப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் அவினாசி சாலை, எஸ்.ஏ.பி சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர், தனது இரு சக்கர வாகனத்தில் அந்த வழியே சென்றுள்ளார்.
போலீஸார் முரளியை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன், அவருடைய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த முரளி குடிபோதையில் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் பொன்னன்னன் என்பவருக்கும் முரளிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
இதில் முரளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீஸ் பொன்னன்னன் சட்டையும் கிழிந்தது.
முரளி பொன்னன்னனின் சட்டையைப் பிடித்து இழுத்தார். ஆனால், பொன்னன்னன் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தார். இதனால், முரளி சாலையில் தரதரவென இழுந்துச் செல்லப்பட்டார்.
போதை இளைஞரை தரதரவென இழுத்துசெல்லும் போலீஸ்காரர்
அப்போது சிலர், ‘ போலீஸ் அராஜகம் ஒழிக’ என்று கோஷமிட்டனர். காயமடைந்த போலீஸ் பொன்னன்னன் மற்றும் முரளி இரண்டு பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.