இந்தியா மறுப்பு:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டுவெடிப்பு இந்திய மத்திய அரசை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டது.
ஈழப் போராளிகள் பயிற்சி முகாம்கள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லையென்று இந்திய அரசு மறுத்து வந்துள்ளது.
‘இந்திய ருடே‘ சஞ்சிகையில் தமிழ் நாட்டில் இருந்த போராளிகளின் பயிற்சி முகாம்கள் பற்றிய புகைப்படம் வெளியாகிய பின்பும், இந்தியா தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்தே வந்தது.
அப்போது இலங்கை பிரதமராக இருந்தவர் பிரேமதாசா ‘இந்திய ருடே’ சஞ்சிகையில் புகைப்படங்கள் வெளியானதையடுத்து பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.
“இந்தியாவில் பயிற்சி முகாம்கள் இயங்குகின்றன. பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் பிரதமராக இதனைக் கூறுகின்றேன்.
இது தொடர்பாக இந்திய அரசு பொறுப்புடன் கவனிக்க வேண்டும்.
இந்தியா எங்களை அற்பத்தனமாக நினைக்க் கூடாது. எமக்கும் சுயகௌரவம் இருக்கிறது. எந்தச் சவாலையும் சந்திக்க நாம் தயார்”
என்று பேசினார் பிரேமதாசா. அப்போது குறுக்கிட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி பா.உ. லக்ஷமன் ஜெயயக்கொடி ஒரு கேள்வி தொடுத்தார்.
“பிரிவினைவாதிகளுக்கு பயிற்சியளிப்பதாக வந்துள்ள செய்திகள் தவறானவை என்று இந்தியத் தூதர் மறுத்துள்ளாரே? என்று அவர் கேட்டார்.
பிரதமர் பிரேமதாசாவுக்கு கோபம் வந்துவிட்டது.
“நீங்கள் என்னை நம்புகிறீர்களா? இந்திய தூதரை நம்புகிறீர்களா? என்று காரசாரமாக கேட்டார்.
அநுராவின் பேச்சு
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் திரு.அநுராபண்டாரநாயக்கா.
பிரதமர் பிரேமதாசாவின் பேச்சுக்கு பதிலளிப்பதுபோல, அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
அவர் சொன்னது இது,
“இந்தியாவில் தீவிரவாதிகளுக்கு பயிற்சியக்கப்படுவது தொடர்பான தகவலில் உண்மை இல்லை” என்று இந்தியத் தூதர் திரு.எஸ்.ஜே.சத்வால் என்னிடம் கூறினார்.
இந்திய அரசு சார்பிலான அவரது கூற்றினை நாம் ஏற்கவேண்டும்.
திரு.சத்வால் திறமைமிக்க ஒரு தூதுவர்.
இந்திய பிரதமர் திருமதி இந்திராகாந்தியினதும், இந்திய அரசின் சார்பிலும் அவர் பதிலளித்துள்ளார்.
இதனை நாம் மறுக்க முடியாது.
அணிசேரா இயக்கத்தின் தலைவியான திருமதி இந்திரா காந்தியின் உறுதிமொழியை நாம் சந்தேகிக்கூடாது”என்றார் அநுரா பண்டாரநாயக்கா.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரே வடக்கு-கிழக்கு பிரச்சனையின் வளர்ச்சி,அதன் விரிவுகள், தொடர்புகள் குறித்து சரியான தகவல்கள் இல்லாமல் எந்தளவுக்கு அப்பாவித்தனமாக பேசியிருக்கிறார் என்று தெரிகிறதல்லவா.
தற்போதும் பெரும்பான்மை இனக்கட்சித் தலைவர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.
அதுதான் இனப் பிரச்சனையின் வடிவத்தை அவர்களால் சரவரப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இலங்கையில்கூட இந்தியாவின் மறுப்பை ஒரு சாரர் நம்பிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்… மீனம்பாக்கம் குண்டுவெடிப்புக்கு ஈழப்போராளிகளே காரணம் என்று வெளியே தெரிந்தால் தமது மறுப்பு பொய்யாகிவிடும் என்று இந்திய மத்திய அரசு நினைத்தது.
விமானத்தில் குண்டை ஏற்றி, கொழும்பு விமான நிலையத்தில் வெடிக்க வைப்பதே தமிழீழ இராணுவத்தின் நோக்கம் என்பதையும் இந்திய அரசு தெளிவாக அறிந்து கொண்டது.
தமிழீழ இராணுவத்தின் இந்த நோக்கம் வெளியானாலும் அதனால் ஒரு பிரச்சனை இந்தியாவுக்கு ஏற்படலாம.
இலங்கையில் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு தளமாக பாவிக்கப்பட்டு வருவதாக குற்ச்சாட்டு எழுந்துவிடும்.
எனவே-குண்டுவெடிப்புக்கு ஈழப் போராளி அமைப்பு ஒன்றுதான் காரணம் என்ற உண்மையை அப்படியே அமுக்கிவிடவே மத்திய அரசு தீர்மானித்தது.
அனால், இதற்கிடையே தமிழக பொலிஸ் தீவிரமாகச் செயற்பட்டு தமிழிழ இராணுவத்தின் உறுப்பினர்கள் சிலரைக் கைது செய்தது.
அவர்கள் கொடுத்த தகவலை வைத்து குண்டு தயாரிக்கப்பட்ட இடமும் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நேரத்தில்தான் இந்திய மத்திய அரசு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரோடு தொடர்புகொண்டது.
விசாரணைகளை தீவிரப்படுத்துவதையும், அது பற்றிய செய்திகள் உள்ளுர் பத்திரிகைகளில் வெளியாவதையும் மத்திய அரசு விரும்பவில்லை என்று எம்.ஜி. ஆரக்கு சூசகமாக சொல்லப்பட்டது.
எம.ஜி.ஆர் குழம்பிப் போனார்.
தமிழக இரகசியப் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மோகனதாசை அழைத்தார் எம்.ஜி.ஆர்.
அழைத்து என்ன சொன்னார் எம்.ஜி.ஆர்? அதனை மோகனதாஸ் தனது எம்.ஆர். நிழலும் நிஜமும் என்ற நூலில் கூறுகிறார். அது இதுதான்.
” அவர் ஒரு குழபத்தில் இருந்தார். வெடிகுண்டு சம்பவத்தில் “மொசாத்” தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி மீண்டும் கேட்டார்.
அதை நாம் ஏற்றுக்கொண்டால் நம்மை கண்டு சிரிப்பார்கள் என்றேன்.
இதுவரை செய்யப்பட்ட குற்றப்புலனாய்வில் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லையென்றால், என்னை உளவுத்துறைப் பதவியில் இருந்து அவர் விடுவித்துவிடலாம் என்றேன்.
ஒரு நிமிட்ம் யோசித்தார். பிறகு புன்புறுவல் பூத்தபடியே “புது டெல்லி அவர்கள் விரும்பியபடியே செய்து கொள்ளட்டும். நீங்கள் உங்கள் விசாரணையை தொடருங்கள் என்றார்.
எம்.ஜி.ஆர்” என்று மோகனதாஸ் தனத நூலில் குறிப்பிடுகிறார்.
ஆனாலும், குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் அடக்கமாகவே பின்னர் மேற்கொள்ளப்பட்டன.
தடையில்லை
தமிழீழ ஈழ இராணுவத் தலைவர் தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமறைவாக இருந்தார். ஆயினும் தமிழ் ஈழ இராணுவம் தொடர்ந்தும் தமிழ் நாட்டில் இயங்குவதற்கு எவ்வித தடையும் இருக்கவில்லை.
விக்கினேஸ்வரராஜா (இலங்கையில் சுங்க இலாகா அதிகாரியாக இருந்தவர்) சந்திரகுமார்(தமிழ் பொலிஸ் கான்ஸ்டபில்) மற்றும் ஏர்லங்காவில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த இரு தமிழர்கள் ஆகியோர் உடனடியாக கைதுசெய்யப்பட்டனர்.
‘த லீக்’ என்னும் இந்திய ஆங்கில சஞ்சிகை பின்வருமாறு எழுதியிருந்தது.
“தமிழ் நாட்டு குற்றப்புலனாய்வுத்துறை பாராட்டப்படும் விதத்தில் செயற்பட்டிருக்கிறது.
ஆனால்.., இந்தச் சம்பவம் முழுமைக்கும் அரசியல் சாயம் பூச அரசியல்வாதிகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். காவல்துறையின் கண்டுபிடிப்பை அடுத்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து செயற்படும் ஈழப்போராளிகள் குழுக்களுக்கு அரசு ஏன் ஆதரவு தரவேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள்”
ஆனாலும் இத்தகைய கேளவிகள் எல்லாம் தமிழ்நாட்டின் சாதாரண மக்களிடம் செல்லவில்லை.
ஈழப் போராளிகளுக்கு தமிழக மக்கள் வழங்கிய ஆதரவு துளியும் குறைவின்றித் தொடரவே செய்தது.
இக்காலகட்டத்தில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார்.
‘ரெசோ‘ என்று அது சுருக்கமாக அழைக்கப்பட்டது.
“இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படவேண்டும்” என்று கருணாநிதி குரல் கொடுக்கத்தொடங்கினார்.
முக்கியமாக மூன்று கோரிக்கைகளை கலைஞர் கருணாநிதியால் முன்வைக்கப்பட்டன.
01.இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படவேண்டும்.
02. இலங்கையுடன் இந்திய தனது இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்ளவேண்டும்.
03.தனித் தமிழீழம் உருவாக மத்திய அரசு ஆவனசெய்ய வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்த போராட்டம் நடத்தினார் கலைஞர்.
கைதுசெய்யுமாறு கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர்.
எட்டாயிரம் தொண்டர்களோடு சிறைபுகுந்தார் கலைஞர்.
“உலகத் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரை விடுதலை செய்” என்று குரல் எழுப்பினார்கள் தி்.மு.க தொண்டர்கள்.
இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் எம்.ஜி.ஆர் அரசு ஏன் கைது செய்ய வேண்டும்?
ஆகவே, எம்.ஜி.ஆருக்கு தமிழ் பற்றுகிடையாது என்று தி.மு.க சொல்லிக்கொள்ள அதுவும் ஒரு வாய்ப்பானது.
தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (ரெசோ) மூலமாக கலைஞர் கருணாநிதி “ரெலோ” இயக்கத்துக்கு மட்டுமே முக்கியத்துவமளிக்க முற்பட்டார்.
இதனால் ஏனைய போராளி அமைப்புகள் “ரெசோ” “ரெலோ”வை வளர்க்கும் அமைப்பு என்று கூறி அதனிடமிருந்து விலகியே இருந்துகொண்டனர்.
ரெசோவுக்குள் முரண்பாடு
கலைஞர் கருணாநிதியோடு திராவிடர் கழகத்தலைவர் சி.வீரமணி,நெடுமாறன் ஆகியோரும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இணைந்து செயற்பட்டு வந்தனர்.
சி.வீரமணியும், நெடுமாறனும் புலிகள் இயகத்தை ஆதரித்து வந்தனர்.
அதனால் ரெசோவுக்குள், ரெலோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.
இக்காலகட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து ஆவேசமாக குரல் கொடுத்தபடி ஒருவர் களத்தில் இறங்கினார்.
அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது.
அவர்தான் மதுரை ஆதீனம்
கடவுளே இல்லை என்று மறுத்துவரும் வீரமணி போன்றவர்களோடு, மடாலயபதி ஏன் இணைந்து கொண்டார் என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.
கேள்வியில் கேலியுமிருப்பதை புரிந்துகொண்டவராக மதுரை ஆதீனம் பதில் சொன்னார்.
” தமிழர்கள் என்ற இன உணர்வு நம்மை இணைத்திருக்கிறது”
தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு அலை வீசிக்கொண்டிருந்தபோது, தமிழ் நாட்டில் தங்கியிருந்த போராளி அமைப்புகள் மத்தியிலான சிறு சிறு உரசல்களும் தொடர்ந்துகொண்டே இருந்தன.
குறிப்பாக புலிகள் அமைப்பினருக்கும், புளொட அமைப்பினருக்குமிடையே கடும் பிரச்சனை நிலவி வந்தது.
நேரில் சந்தித்துக்கொண்டால் மோதிக்கொள்ளும் அளவுக்கு பிரச்சனை சூடாக இருந்தது.
(பொட்டு அம்மான் தலைவர் பிரபாகரனுடன்)
புலிகள் கடத்தல்: கூட்டணி தலைவாகள் வீட்டில் புலி உறுப்பினர்களுக்கு அடி
1502.85 இல் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை புளொட் அமைப்பினர் சென்னையில் வைத்து கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்டவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரியந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சங்கரியின் சென்னையிலுள்ள வீட்டுக்குத்தான் கடத்தப்பட்டவர் கொண்டு செல்லப்பட்டார்.
கடத்தி செல்லப்பட்டவரின் பெயர் ஆதவன்.
அதைத் தொடர்ந்து 05.03.85ல் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரையும், இன்னொரு உறுப்பினரையும் புளொட் அமைபினர் கடத்திச் சென்றனர்.
அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட புலிகளது மூத்த உறுப்பினர் வேறு யாருமல்ல, பொட்டம்மான் தான் அவர்.
அப்போது ‘பொட்டு’ என்று அழைக்கப்பட்டார்.( பின்னர் புலிகளின் உளவுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர்)
பொட்டம்மானிடம் இருந்த கைத்துப்பாக்கியையும் பறித்துவிட்டு விடுவித்தனா புளொட் அமைப்பினர்.
இதற்கு முன்னர் யாழ்பாணம் சுழிபுரத்தில் வைத்து புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் 06 பேர் புளொட் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
இது நடந்தது 25.11.84ல் புலிகள்
அமைப்பு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவதை கண்டுவிட்டனர் இரு இளைஞர்கள். அதனால் அவர்களும் கொல்லப்பட்டர்.
இக்கொலைகளைத் தொடர்ந்தே புளொட் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கு மிடையிலான மோதல் நிலை தீவிரம் அடைந்தது.
கண்ணன் கடத்தல்
பொட்டம்மான் கடத்தப்பட்டதோடு பிரபாகரன் சீற்றம் அடைந்தார்.
தமது மூத்த உறுப்பினர் கடத்தப்பட்டதற்கு பதில் நடவடிக்கை எடுக்க புலிகள் திட்டமிட்டனா.
சென்னையில் உள்ள மகாவலிங்கபுரம் என்னுமிடத்தில் தமிழ் தகவல் நிலைய அலுவலகம் இருந்தது.
07.03.85 காலை 09 மணிக்கு அங்கு வந்தார் புளொட் அமைப்பின் படைத்துறைச் செயயலாளா கண்ணன்.
தமிழ் தகவல் நிலையத்தில் இருந்த ரெலோ உறுப்பினனரான குலசிங்கம் என்பவரோடு கண்ணன் பேசிக்கொண்டிருந்தார்.
திடீரென அலுவலகத்தின் வெளியே வெடி ஓசை கேட்டது.
புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரான சங்கர் என்று அழைக்கப்படும் சொர்ணலிங்கமும், வேறு சில புலிகளும் உள்ளே வந்தனா.
கண்ணணை தம்மோடு வருமாறு கூறி வேன் ஒன்றில் கொண்டுசென்றனர்.
கண்ணனோடு வந்திருந்தவர்களில் ஒருவரான ரவி என்னும் புளொட் உறுப்பினருக்கும் காலில் சுட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
தமிழக பொலிஸ் துறையும், உளவுப்பிரிவும் தலையிட்டு கண்ணனை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் கோரின.
இரண்டு மணி நேரத்தின் பின்னர் கண்ணன் விடுவிக்கப்பட்டார்.
இதணையடுத்து புளொட் அமைப்பினர் விடுத்த அறிக்கையில் கடத்திச் செல்லப்பட்ட கண்ணன் பிரபாகரன் முன்னிலையில் கை,கால்களுக்கு விலங்குகள் பூட்டப்பட்டு,சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
கண்ணன் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து புலிகள் அமைப்பினரும் விரிவான பிரசுரம் வெளியிட்டிருந்தனர்.
“இது ஒரு இறுதி எச்சரிக்கை நடவடிக்கையாகும்” என்று தெரிவித்த புலிகள் அமைப்பினர், தமது உறுப்பினர்கள் கடத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு கண்ணனே பொறுப்பாகும் என்றும் கூறியிருந்தனர்.
1985 இன் ஆரம்பத்தில் யாழ்பாணத்தில் புலிகள் அமைப்பினரின் பிரதான மறைவிடம் ஒன்றை நோக்கி இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருந்தனர்.
(தொடந்து வரும்)
(அரசியல் தொடர்… எழுதுவது..அற்புதன்)