பிலியந்தலை பகுதியில் போதைப் பொருள் சுற்றி வளைப்புக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மிகத் திட்டமிட்டு போலியாக தகவல் வழங்கி நடத்தப்பட்ட தாக்குதல் என ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவின் ஆலோசனைகளுடன் நான்கு சிறப்பு குழுக்கள் முன்னெடுகத்து வரும் விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் சிக்கியது
அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றுக் காலை தெஹிவளை – மஹரகம பிரதான வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் அருகே கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்ப்ட்டுள்ளது.
இந் நிலையில் இந்த தாக்குதலானது பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரினால் மிகத் திட்டமிட்ட சம்பவம் என பொலிஸ் உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்துடன் இந்த தாக்குதலின் பின்னால் தெற்கின் பிரபல பாதாள உலகத் தலைவனும் களுத்துறை சிறைச்சாலை பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர்களில் ஒருவருமான மதூஷ் என்பவரின் குழுவினருக்கு தொடர்புள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பிலியந்தலை மொறட்டுவ பிரதான வீதியின் மக்கள் வங்கிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட. துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளான (4946) அபேவிக்ரம உயிரிழந்தார் எனவும் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ, பொலிஸ் கான்ஸ்டபிள் (67055) சமிந்த ஆகியோர் காயமடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
சிறுமி, சிறுவன், சிவிலியன் காயம்
இந்தச் சம்பவத்தில் 8 வயதான சிறுமி, 15 வயதான சிறுவன், ஒரு சிவிலியன் ஆகியோர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 வயது சிறுமியின் நிலைமை கவலைக் கிடமாகவுள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்
சுமார் 10 கிலோ வரையிலான போதைப் பொருள் வர்த்தகம் ஒன்று தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அது தொடர்பில் உடன் செயற்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அதன் பிரதானியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் ஆலோசனையைப் பெற்று செயற்பட்டுள்ளது.
அதன்படி அது தொடர்பிலான சுற்றிவளைப்புக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ தலைமையில் குழு பொலிஸ் தலைமையகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த பாதாள உலகக் குழுவினர்
இந்நிலையில் இக்குழுவினர் சுற்றிவளைப்புக்காக பிலியந்தலையை அடைந்தபோது இவர்கள் மீது பிலியந்தலை மக்கள் வங்கியை அண்மித்து நடு வீதியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் பயணித்த வாகனத்தை முந்திச் செல்வது போன்று வந்துள்ள மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ள பாதாள உலகக் குழுவினர் என சந்தேகிக்கப்படும் நபர்கள் பொலிஸாரின் வாகனம் மீது சரமாரியாக வேட்டுகளைத் தீர்ததுள்ளனர்.
இதன் போது பொலிஸ் ஜீப் வண்டியை செலுத்திச் சென்றதாக நம்பப்படும் பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். ஜீப்பிலிருந்த ஏனையோர் காயமடைந்துள்ளனர்.
வாகனங்கள் சேதம்
இதனை விட இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் போது அப்பகுதியிலிருந்த வர்த்தக நிலையம் ஒன்றும் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்ப்ட்டுள்ளன.
இதன் போதே அந்த வர்த்தக நிலையம் அருகே இருந்த இரு சிருவர்களும் மற்றைய சிவிலியனும் காயமடைந்துள்ளனர். இதனைவிட பொலிஸ் ஜீப் வண்டிக்கு மேலதிகமாக அப்பகுதியிலிருந்த மேலும் மூன்று வாகனங்களும் துப்பாக்கிப் பிரயோகத்தில் சேதமடைந்துள்ளன.
துப்பாக்கிச் சூட்டை யடுத்து உடனடியாக பாதாள உலக உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் காயமடைந்தவர்கள் முதலில் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டு பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான குற்றம் மற்றும் போக்குவரத்து விவகாரங்களைக் கையாளும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் 11 சிறப்பு குழுக்கள் விசாரணை களை முன்னெடுக்கின்றன.
இதேவேளை, மேற்படி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸ் சார்ஜன்டாக பதவி பொலிஸ்மா அதிபரால் நேற்றைய தினம் பதிவி உயர்தப்பட்டுள்ளார்,