இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கவேண்டி உள்ளதால் அடுத்தவாரம் கிளாஸ்கோவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியை லண்டனில் இருந்து வெளியாகும் “தி ரைம்ஸ்” நாளிதழ் வெளியிட்டுள்ளத. 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த 26 ஆண்டு காலப் போரின் இறுதிக்கட்டத்தில், 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள பிரார்த்தனையில் தாம் பங்கேற்றால், இதன் தாக்கம், எதிரொலிக்கும் என்ற கவலை இலங்கை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.
கொமன்வெல்த் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய அரசியல்வாதிகள் இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்கின்றனர்.
அடுத்த ஆண்டு வரை கொமன்வெல்த் அமைப்பின் தலைவராக மகிந்த ராஜபக்ச பதவி வகிப்பார் என்ற போதும், அவர் இந்த நிகழ்வில் இருந்து ஒதுங்கி நிற்கவுள்ளார்.
புனித முன்கோஸ் தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில், இலங்கையின் சார்பில், பிரித்தானியாவுக்கான அதன் தூதுவர் பங்கேற்கவுள்ளார்.
இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்குமாறு, இலங்கை ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அரசாங்கம் கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.