“உலகம் தூங்கும் பொழுது நான் மட்டும் விழித்துக்கொண்டு இருப்பேன். எல்லோரும் உழைத்த களைப்பில் கண்ணுறங்கும் பொழுது நான் எனது வேலையை ஆரம்பித்து இருப்பேன்.என மனம் எதை செய்ய சொல்லுகிறதோ அதை மட்டுமே செய்வேன்.
எந்த வேலையை செய்வது என்றாலும் என் ஆத்மா எனக்குள் சைகை காட்டும், அதை மட்டும்தான் முழுமையாக செய்வேன்.
இதை எனது வெற்றி என்றும் தோல்வி என்றும் வைத்துக்கொள்ளலாம்” தாவூத் தன்னைப்பற்றியும் தனது வேலையைப்பற்றியும் தனது சகாக்களிடம் பெருமிதமாக எப்போதாவது சொல்லும் வார்த்தைகள் இவை.
பெரும்பாலும் தாவூத், இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு மேல் பேசமாட்டான். தாவூத் பார்வைக்கு அர்த்தம் தெரிந்து ஆடுவது சோட்டா ராஜன்தான்.
சோட்டா ராஜனுக்கு பிறகு சோட்டா ஷகில்தான் எல்லாமே. ஆனால் சோட்டா ராஜனின் இடத்தை இதுவரை யாராலும் நிரப்பவே முடியவில்லை.
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கில் கலக்கிய ஜாவேத்
ஜாவேத்திற்கும் இந்தியாவிற்கும் எப்பொழுதும் ஆகாது. எல்லா நாடுகளுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் என்கிற முறையில் ஜாவேத் உலக நாடுகளுக்கு பறந்தாலும் இந்தியாவிற்கு மட்டும் வருவதில்லை.
கிரிக்கெட் நடக்கும் நாடுகளுக்கும் ஜாவேத் சென்று விளையாட்டை வேடிக்கை பார்ப்பதுண்டு. ஆனால் ஜாவேத்தின் ஆட்கள், கிரிக்கெட் பிளேயரின் பாத்ரூம் வரைக்கும் போய் வருவார்கள்.
யார், எப்படி, எந்த வேடத்தில் போவார்கள் என்பது தெரியாது. பல சமயங்களில் அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களை தங்களுக்கு வேலை பார்க்கும் நபராக மாற்றி விடுவதில் கில்லாடி ஜாவேத்.
இதனால் தாவூத் சொன்ன மாதிரிதான் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும். ஒரு சில விதிவிலக்குகள் மட்டும் இருக்கும். மெல்ல மெல்ல இந்த விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் இதற்காகவே தனியாக பயிற்சி கொடுக்கப்பட்ட ஆட்களை இறக்கியது தாவூத்தின் ‘டி’ கம்பெனி.
இந்த துறைக்கு முழுப்பொறுப்பு ஜாவேத் என்பது வெளி உலகிற்கு தெரியாத விஷயமாக இருந்தது. பின்னாளில் ஜாவேத் செய்த ஒரு செயலால் அதுவும் அம்பலமானது.
2004- ம் ஆண்டு தாவூத்தை சர்வதேச தீவிரவாதியாக உலக நாடுகள் அறிவித்த பிறகு, தாவூத்தால் முன்பு போல எங்கும் சுதந்திரமாக சுற்றிவர முடியவில்லை.
அதனால் அவனுக்கு என்று ஒரு நிரந்த முகவரியை தேடிய பொழுதுதான் கிடைத்த ஐடியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டுக்கு சம்பந்தியாவது.
பாகிஸ்தான் கிரிகெட் அணியில் இருந்து ஜாவேத் ஓய்வு பெற்ற பிறகு, பல்வேறு மேட்ச் பிக்சிங் விவகாரங்களில் தாவூத்திற்கு மூளையாக செயல்பட்ட காரணத்தினால், தாவூத்துடன் நெருக்கமான நட்பை பெற்றார்.
அந்த நட்புதான் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில், ஜாவேத் பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கும் அளவிற்கு கொண்டு வந்தது. அந்த உறவு அப்படியே டபுள் புரோமொசனாகி சம்பந்தியாக்கியது.
கவனிக்க வைத்த கல்யாணம்… கழுகுப்பார்வையில் தாவூத்
தாவூத்தின் மகள் மாரூ, லண்டனில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். ஜாவேத்தின் மகன் பிரபல பல்கலைகழகமான ஆக்ஸ்போர்டில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை படித்துக்கொண்டிருந்தான்.
இருவருக்கும் அவர்கள் வீட்டில் இருந்து திடீர் அழைப்பு வந்ததும், பாகிஸ்தானுக்கு பறந்து வந்தார்கள். வந்தவர்களுக்கு வீட்டுக்குள் நடக்கும் படா படா ஏற்பாடுகள், பாகிஸ்தானின் முக்கிய புள்ளிகளின் வருகைகள் என்று நடப்பது எதுவும் தெரியாமல் இருந்தனர். பின்புதான் தெரிந்தது அது திருமணத்திற்கான நிச்சயதார்த்த ஏற்பாடு என்று.
2005 ஜனவரி 25-ம் தேதி தாவூத்தின் மகள் மாரூ – ஜாவேத் மகன் ஜீனத்கான் திருமண நிச்சயதார்த்தம், பாகிஸ்தானின் முக்கிய புள்ளிகள் முன்னிலையில் நடந்தது.
பாகிஸ்தானில் உள்ள நடுநிலை ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டது. உடனே மற்ற ஊடகங்கள், ஜாவேத்திடம் தொடர்பு கொண்டு கேள்விகளை கேட்டார்கள். ஜாவேத் “அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம்” என்றார்.
அதன் பிறகு பல்வேறு ஊடகங்கள் கிடுக்கு பிடியை போட்டதும் “தாவூத்தின் மனைவி மேஜாபீனும், ஜாவித்தின் மனைவி ஷபீனும் சேர்ந்து முடிவு செய்தார்கள்.
ஜீனத்தும், மாரூவும் விரும்பியதால் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது ” என்று எல்லா மீடியாக்களுக்கு தகவலை சொன்னார்.
இந்த தகவலை ஜாவேத் சொன்னபொழுது, “அதனால் வரும் 2005, ஜூலை மாதம் 23 ல் இருவருக்கும் திருமணம் நடக்கப்போகிறது” என அடுத்த தகவலையும் கூடவே சொன்னார்.
திருமண அழைப்பிதழ் வெறும் 500 மட்டுமே அடிக்கப்பட்டது. உலகத்தின் உள்ள முக்கியமான 500 நபர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது.
துபாயில் உள்ள துபாய் கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் திருமணம் நடக்கப்போகிறது என்று துபாய் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் வந்தன.
உடனடியாக மொசாட் , MI 6, சி.ஐ.ஏ, ஐ.பி, ரா என்று பல்வேறு நாட்டின் உளவுத்துறை அதிகரிகளும் அலர்ட் ஆனார்கள். எப்படியாவது தாவூத்தை இந்த முறை கையோடு பிடித்து விட வேண்டும் என பல்வேறு நாட்டின் உளவுத்துறையினர், ஒரு வாரம் முன்பே கூடினார்கள் துபாயில்.
இந்தியாவில் உள்ள முக்கியமான பத்திரிகையாளர்கள், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஊடவியலாளர்கள் என்று ஒட்டு மொத்த நபர்களும் தாவூத்தின் வரவை நோக்கி காத்திருந்தனர்.
துபாய் கிராண்ட் ஹயாட் ஹோட்டலில், பார்க்கிங் சேர்த்து 39 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த ஹோட்டலின் உள்ள அனைத்து அறைகளையும் புக் செய்து இருந்தனர் தாவூத்தின் ‘டி’கம்பெனி ஆட்கள்.
திருமண வேலைகளை செய்யும் எடுபிடிகளாக, டிரைவராக, சமையல் வேலை செய்பவராக என்று பல்வேறு இடங்களில் முக்கியமான அதிகாரிகள் ஊடுருவி இருந்தார்கள்.
தாவூத் இல்லத் திருமணத்தில் தாவூத்திற்கு ஸ்கெட்ச் போட்ட இந்திய உளவுத்துறை
திருமணம் நடக்கும் முன்பே ஜூலை 7-ம் தேதி லண்டனில் குண்டு வெடிப்பு நடந்திருந்தது. பல்வேறு இழப்புகளை சந்தித்ததால் பெரும் பதட்டமான சூழலில் இருந்த இந்திய உளவுத்துறையான ஐ.பி., நாட்டின் முக்கியமான உளவுத்துறை அதிகாரிகள் கூடும் இடத்தில் தாவூத்தை போட்டு தள்ளுவது என்று முடிவு எடுத்திருந்தது.
அதற்காக உயர்மட்டக் குழுவினர் ஒன்று கூடி பேசி, யார் இதற்கு சரியான ஆட்கள் என்று முடிவு செய்தனர். ‘சோட்டா ராஜன்தான் சரியாக செய்வான் அவனிடம் வேலையை கொடுத்தால் கச்சிதமாக வேலை முடிந்து விடும்’ என்று சோட்டா ராஜனிடம் பேசினார்கள்.
மகளின் திருமண நாளில் தாவூத்தை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது. பஞ்சாப்பில் ‘ஆபரேசன் புளூ ஸ்டார்‘ என்ற தாக்குதல் திட்டத்தை முன்னின்று நடத்திய அஜய் தோவ்வால், சோட்டா ராஜனிடம் பேசி எல்லா ஏற்பாடுகளும் செய்து தருவதாக வாக்கு கொடுத்து, முக்கிய அமைச்சர் ஒருவரை வைத்து பேசியும் இருந்தார்.
இதற்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருந்தன. இந்திய விசா, பாஸ்போர்ட்டில் அரசு அதிகாரிகள் போல துபாய்க்கு பறக்க மல்ஹோத்ரா, தனஷாவினடாகியோர் மும்பைக்கு வந்தனர்.
இவர்கள் இருவரும் சோட்டா ராஜனின் ஆட்கள் என்பதால், மும்பையில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் அவர்களை கவனிக்க ஆரம்பித்தார்.
அவர்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. பெரிய திட்டம் போட்டிருப்பது உறுதியானது. ஆனால் யாரை கொலை செய்யப்போகிறார்கள் என்பது மட்டும் தெரியவில்லை.
இருந்தாலும் இருவரையும் அந்த அதிகாரி துப்பாக்கி முனையில் மடக்கிய பொழுது அஜய் தோவ்வால் உள்ளே புகுந்தார். இருவருக்கும் பயங்கர வாக்குவாதம் நடந்தது.
முடிவில் துபாய்க்கு மல்ஹோத்ராவையும், தனஷாவாவையும் அனுமதிக்காமல் இருந்தார் அந்த அதிகாரி. இருவரும் அவரின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். விஷயம் எல்லை மீறிப்போய்விட்டது.
மகளின் திருமணத்திற்கு வந்தானா தாவூத்?!?
அடுத்தநாள் ஆங்கில நாளேடு ஒன்று இந்த சம்பவம் குறித்து தாவூத்தை கொலை செய்ய ‘வாடகை கொலையாளிகளை நியமித்த இந்திய அரசு என்று தலைப்பு செய்தியாக வெளியிட்டது.
இந்த செய்திகள் பெரும் விவாதத்தை நடத்தி கொண்டிருக்கும்பொழுது தாவூத் வீட்டு திருமணம் நடந்து கொண்டியிருந்தது.
துபாய் விமான நிலையம், ஹோட்டல்கள், உல்லாச குழுக்கள் என்று துபாய்க்கு மூன்று மாதங்களாக போய் வந்த நபர்களின் லிஸ்ட்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எடுத்தது. அதோடு துபாய் போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு பாதுகாப்பு கொடுத்தார்கள்.
திருமண விருந்துகள், நான்கு நாட்டு உணவு வகைகள், கமகமக்கும் மல்லிகை பூக்கள் ஆரம்பித்து உலகத்தில் கிடைக்கும் அனைத்து பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த ஹோட்டலில், அனைத்து கண்களும் தாவூத்தைதான் எதிர்பார்த்து இருந்தன.
திருமணமும், விருந்தும் நடந்து முடிந்து அனைவரும் வீட்டிற்கு கிளம்பும் நிலையில் ஒரே குழப்பமான சந்தேக நிலையில் போனார்கள்.
தாவூத் வந்தாரா இல்லையா? என்று அனைவருக்கும் மில்லியன் டாலர் கேள்வி மட்டும் எஞ்சி இருந்தது அந்த உச்சக்கட்ட காஸ்ட்லி கல்யாணத்தில். ஒரு மாதம் கழித்து மொஸார்ட் மட்டும் இதற்கான முடிச்சை அவிழ்த்தது.
ஆம்…. தாவூத் திருமணத்திற்கு வந்திருந்தார். ‘துபாய் மன்னரும் அவரது குடும்பத்தினரும் திருமணத்திற்கு வந்தார்கள். அந்த மன்னர்களோடு மன்னராக தாவூத் வந்து போனார்.
ஒரு சில நிமிடங்கள், மன்னருக்கு ஒதுக்கிய இடத்தில் இருந்து அனைத்து அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்’ என்று ரிப்போர்ட் போட்டது.
இதனை அறிந்த ஒட்டு மொத்த உளவுத்துறை உலகமும் ஆடிப்போனது. எப்படி கோட்டை விட்டோம் என்று விவாதம் நடந்து கொண்டு இருக்கும்பொழுதே மகளின் திருமணத்தில் தனக்கு ஸ்கெட்ச் போட்ட சோட்டா ராஜனுக்கு தாவூத் போட்ட ஸ்கெட்ச் பயங்கரமானது. அது என்ன… ?
அடுத்த வாரம் பார்க்கலாம்…
– சண்.சரவணக்குமார்
இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்…