அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனைகள் சுமார் 250க்கும் மேற்பட்டவர்களை, வைத்தியர் என்ற முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த லெரி நாஸரை, பாதிக்கப்பட்டவர்களின் தந்தையொருவர் நீதிமன்றில் தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாஸர் மீதான தமது கருத்துக்களை பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் நீதிமன்றில் தெரிவித்தனர். அவர்களுடன் நீதிமன்றம் வந்திருந்த அவர்களது தந்தை ரன்டோல் மார்க்ரேவ்ஸ் என்பவர், தானும் பேச அனுமதி கேட்டார்.
நீதிபதி அனுமதி வழங்கவே, தன்னையும் நாஸரையும் சிறையறையில் விட்டு ஐந்து நிமிடம் மூடிவிட முடியுமா என்று கேட்டார். மறுத்த நீதிபதியிடம், ஒரு நிமிடமாவது தரக் கோரினார்.
அமெரிக்க சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று நீதிபதி மறுத்தார்.
அப்போது, திடீரென வெகுண்டெழுந்த ரன்டோல், நாஸரைத் தாக்கப் பாய்ந்தார். உடனே அங்கிருந்த பொலிஸார் அவரைத் தரையில் தள்ளிக் கைது செய்து நீதிமன்றை விட்டு வெளியேற்றினர்.
நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக அவருக்குத் தண்டனை தர வேண்டும் என நாஸரின் தரப்பு சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.
எனினும் சில நிமிட நேரங்களின் பின் ரன்டோலை நீதிமன்றினுள் வரச் செய்த நீதிபதி, அவர் செய்தது குற்றமே என்றாலும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் அப்படி நடந்துகொண்டதால் அவரை விடுவிப்பதாகவும் இனி இவ்வாறானதொரு செயலில் இறங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த ரன்டோல், “நாஸர் மீது வைத்திருந்த முழு நம்பிக்கையின் பேரிலேயே எனது பிள்ளைகளை அவரிடம் அனுப்பினேன்.
ஆனால் என் நம்பிக்கையை அவர் குலைத்துவிட்டார். என் மகள்மார் தாம் எதிர்கொண்ட கடுமையான சூழலை விபரித்தபோது, தான் அவ்வாறு செய்யவில்லை என்பதாக நாஸர் தலையை இடம், வலமாக ஆட்டினார்.
இதுவே என்னை ஆத்திரப்படுத்தியது. என்னை மன்னித்து விடுங்கள்” என்று உணர்வுபூர்வமாகக் கூறினார்.
ரன்டோலின் செயல் தவறானது என்றபோதும் இணையதளவாசிகள் அவரை ஒரு வீரராகக் கொண்டாடி பாராட்டி வருகிறார்கள்.
மேலும், இச்செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே அவருக்கு ஆதரவாக தன்னார்வத் தொண்டர்கள் இணையதளம் மூலம் நிதி திரட்டியதில் 12 ஆயிரம் டொலர்கள் கிடைத்திருக்கிறது.
நாஸர் மீதான தீர்ப்பு எதிர்வரும் திங்கட்கிழமை வாசிக்கப்படவிருக்கிறது.