மகாராஷ்டிராவின் ராஜ்கட் மாவட்டத்தின் துணை ஆட்சியர் அபய் கர்குட்கரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அடித்து உதைத்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
நிலம் கையகப்படுத்துதல் பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பான கூட்டம் கடந்த வியாழக்கிழமை மும்பையில் நடைபெற்றது. அக் கூட்டத்தின் போது, நிலம் கையகப்படுத்திய பின்னர் அரசு கொடுக்க வேண்டிய இழப்பீடு குறித்து எம்எல்ஏவுக்கும், துணை ஆட்சியருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான வாக்குவாதத்தின் போது எம்எல்ஏ சுரேஷ், துணை ஆட்சியரை பளார் என கன்னத்தில் அடித்துள்ளார். இந்தக் காட்சி வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் இதனை எம்எல்ஏ சுரேஷ் மறுத்துள்ளார். தேசியவாத காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக்கும் இதை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஏன் அந்த அதிகாரி போலீசில் புகார் செய்யவில்லை.
ஏன் அவர் அமைதியாக இருக்கிறார்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே அடி வாங்கிய துணை ஆட்சியர் அபய் கர்குட்கர் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.