இனவாதம், மதவாதம் பேசுபவர்கள் மற்றும் செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் உறுதி மொழிகளுக்கமைய இச்சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்தது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை கிருலப்பனையிலுள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பாக இங்கு மேலும் தெளிவுபடுத்துகையில்;
கடந்த காலங்களில் நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டும் விதத்தில் மட்டுமல்லாது மதவாதத்தை தூண்டி விட்டு மோதல்களை ஏற்படுத்தும் விதத்தில் பலர் கருத்துக்களை வெளியிட்டனர்.
பகிரங்கமாக கூட்டங்களில் பேசினார்கள். எதிர்காலத்தில் இந்நிலை வியாபித்து குல பேதங்களை தூண்டி விடும் நிலைக்கு செல்லும் ஆபத்து தலை தூக்கியது.
இதன் காரணமாகவே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ அமைச்சரவைக்கு முன்வைத்த குற்றவியல் சட்டக்கோவையின் 22 ஷரத்திற்கான திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியது.
இனவாத மதவாதத்தை தூண்டி விடும் விதத்தில் பேசுபவர்களுக்கும் அவ்வாறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கும் எதிராக இச்சட்டம் அமுல்படுத்தப்படும்.
அதற்கமைய இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்
இலங்கையில் இடம்பெற்ற பல தசாப்த கால ஆயுதப் போராட்டத்தை திரும்பிப் பார்த்து அதன் மூலம் பொதுப்பட்ட அனுபவங்களுக்கு ஊடாக எதிர்கால நடவடிக்கைகளுக்கு எவ்வாறு உள்ளீர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ளும் யுகத்தை உறுதி செய்து கொள்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவினர் இனங்களிடையே ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு பல தருணங்களில் பங்களிப்பு செய்ததை கண்காணித்துள்ளனர்.
எனவே இனத்துவ மற்றும் மதம் தொடர்பாக குரோதத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுவது இனங்கள் மக்களிடையே நெருக்கடிகளை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்குகின்றது.
எனவே அதனை தடுப்பதற்கு சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அச்சட்டங்கள் கடுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் இவ்வாறு கருத்துக்களை வெளியிடுவதற்கு தடை செய்ய வேண்டுமென்றும் இணக்கப்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது்.
அவ்வாறு கருத்துக்களை வெளியிடுவோருக்கு தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை குற்றவியல் சட்டக்கோவையில் உள்ளடக்கி அதற்கான சட்ட நகல் திருத்தம் தயாரிக்கப்பட்டு அதனை வர்த்தகமானி அறிவித்தல் ஊடாக வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இவ் அமைச்சரவை பத்திரத்தை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ சமர்ப்பித்தார். இனவாதம் மதவாதத்தை தூண்டி விடும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு மட்டுமல்ல அவ்வாறாக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கமைய இரண்டு வருட சிறைத்தண்டனையும் கிடைக்குமென்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.