பிக்பாஸ் ஷோவில் கலந்துகொள்கிறவர்களுக்கு சம்பளம் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்…
பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் இருந்து சமீபத்தில் வெளியில் வந்த நடிகை மதுமிதாவுக்கும் சேனலுக்கும் இடையிலான சம்பளப் பிரச்னை உச்சத்துக்கு வந்து, விவகாரம் போலீஸ் புகார் வரை சென்றுவிட்டது.
50 நாள் வரை இருந்தவருக்கு 11 லட்சம் வழங்கப்பட்டுவிட்டதாகவும் மீதித் தொகை விரைந்து வழங்கப்படும் எனவும் சேனல் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், ‘உடனடியாக அந்தத் தொகை வேண்டும், இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்’ என மதுமிதா மிரட்டுவதாகவும் சில தகவல்கள் வந்தன.
சரஸ்வதி என்ற விகடன் வாசகியும், விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், “பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பளம் நிர்ணயிப்பார்கள்” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
களத்தில் இறங்கி விசாரித்தோம்.
’உலக அளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’, தமிழுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிடுச்சு.
‘வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் ‘பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்’னு தினந்தினம் ஒரு லிஸ்ட் வந்திட்டிருக்கு. அவையெல்லாம் சம்பந்தப்பட்டவங்க கற்பனை.
‘வாரத்துக்கு இவ்வளவு’னு சம்பளம் பேசுவாங்க. செலிபிரிட்டிகளின் பிரபல்யத்தைப் பொறுத்து அந்தச் சம்பளம் வழங்கப்படுற கால அளவு மாறுபடும்.
ரொம்ப பிரபலமானவங்களுக்கு உடனே தந்திடுவாங்க. இந்த ஷோ மூலம்தான் வெளியுலகத்துக்கே தெரிய வர்றாங்கன்னா, அவங்களுக்கு ஷோ முடிஞ்சு ரெண்டு மூணு மாசம்கூட ஆகும்.
சம்பளத்தைப் பொறுத்தவரை போட்டியாளர்களின் மார்க்கெட் வேல்யூ, அவங்க அந்த டைம்ல ஏதாவது ஷோவுல இருந்தா, அங்க வாங்கிட்டிருக்கற சம்பளம் இதையெல்லாம் வச்சு சேனல் ஒரு தொகையை முடிவு செய்து வச்சிருக்கும்.
போட்டியாளர்கள்கிட்ட ஒரு டிமாண்டு இருக்கும். இந்த ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி ஃபைனல் பண்ணுவாங்க.
உதாரணமாச் சொல்லணும்னா, பிக் பாஸ் முதல் சீஸன்ல புதுமுகமா ஜூலி அறிமுகமானாங்க. அவங்க அப்ப நர்ஸ் வேலை பார்த்திட்டிருந்தாங்க.
அந்த வேலை மூலமா அவங்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கும்னு கால்குலேட் பண்ணி, அதுல இருந்து ஒருநாள் ஊதியத்தைக் கணக்கிட்டு, ஷோவுல எத்தனை நாள் இருந்தாங்களோ, அத்தனை நாளைக்கான தொகையைத் தந்தாங்க.
ஜூலி ஏற்கெனவே சினிமா, டிவிக்குப் பரிச்சயம் ஆகாத முகம்கிறதால இப்படி. நடிகர், நடிகைகளுக்கெல்லாம் இந்த அடிப்படையில வழங்க முடியாது.
இரண்டாவது சீஸனில் கலந்துகொண்ட நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவுக்கும் ஜூலியைப் போலவே மிகவும் குறைவு. அதேநேரம் அவரின் கணவர் பாலாஜிக்கு சம்பளம் அதிகம்.
அதனால ஒரு நாளைக்கு 30,000 ரூபாய்ல இருந்து 5 லட்சம் வரைக்கும் வழங்கப்படலாம். போட்டியாளர்கள் எத்தனை நாள் அந்த வீட்டுக்குள் இருக்கிறார்களோ அத்தனை நாளைக் கணக்கிட்டு வழங்கப்படும். பிரபலமில்லாத போட்டியாளர்கள் புகழுக்கு ஆசைப்பட்டு சேனல் தரும் ஊதியத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.
மத்த மொழிகளைக் காட்டிலும் தமிழ் பிக் பாஸ்ல சம்பளம் குறைவுதான். தெலுங்கு பிக் பாஸ்ல ஒரு சீஸன்ல நடிகர் ராணாவே விருந்தினர் மாதிரி வந்து போனார்.
அதற்கான தொகையெல்லாம் ரொம்ப அதிகம். தமிழ்ல அந்த மாதிரி பெரிய ஸ்டார்கள் இதுவரை இந்த ஷோவுக்குள் வரலை’ என்கிறார் ஷோ தொடர்புடைய ஒருவர்.
முதல் மற்றும் இரண்டாவது சீஸனில் இந்தச் சம்பளம் தொடர்பாக போட்டியாளர்களுக்கும் சேனலுக்கும் இடையே பெரிதாக எந்த முட்டல் மோதலும் இல்லை.
இரண்டாவது சீஸனில் கலந்து கொண்ட வில்லன் நடிகர் மட்டுமே ஷோவிலிருந்து வெளியே வந்தவுடனேயே சம்பளத்தை நச்சரித்து வாங்கினாராம்.
அதேபோல இரண்டாவது சீஸனில் விருந்தினராக ஒருநாள் வந்து செல்ல ஓவியாவுக்கு வழங்கப்பட்ட தொகை, அவர் முதல் சீஸனில் வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமாம்.
தற்போதைய மூன்றாவது சீஸனைப் பொறுத்தவரை சேரனுக்கு அதிக சம்பளம் இருக்குமென்கிறார்கள்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலைப் பொறுத்தவரை மொத்தம் 16 நாள்கள் அவருடைய கால்ஷீட் என்கிறார்கள். சினிமா ஷூட்டிங் சென்றால் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் இருக்குமோ அதைவிடக் கூடுதலாகவே நிர்ணயித்து வழங்குகிறார்கள்.