உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் மந்திரியாக இருப்பவர் சுவாமி பிரசாத் மவுரியா.
இங்குள்ள பஸ்தி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மவுரியா, நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிவரும் ‘முத்தலாக்’ விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
பழைய மனைவிகளை கழற்றிவிட்டு, புதிய மனைவியர் மூலம் தங்களது காமம்சார்ந்த அபிலாஷைகளை தீர்த்து கொள்ளவும், பழைய மனைவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தைகளை தெருவில் பிச்சை எடுக்க வைக்கவும் ‘முத்தலாக்’ என்னும் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் பழக்கத்தை முஸ்லிம் ஆண்கள் கடைபிடித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த முத்தலாக் முறைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்ட மவுரியா, உரிய காரணம் இல்லாமலும் அநீதியான முறையிலும் இத்தகைய முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடிவரும் பெண்களுக்கு பா.ஜ.க. பக்கதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.