திருவள்ளூர் மாவட்டத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர், அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்.
செல்போனில் மனைவி பாட்டு கேட்டபோது அதற்கு இடையூறாக டி.வியை சத்தமாக கணவன் வைத்ததால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, தும்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன்.
இவருடைய மகள் தரணி.
இவருக்கும், கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கன்னியப்பனுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தரணிக்கும், கன்னியப்பனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதையடுத்து தரணி, ஊத்துக்கோட்டையில் உள்ள பெரியம்மா வள்ளியம்மாள் வீட்டில் குடியிருந்து வந்தார்.
அப்போது வள்ளியம்மாளின் மகன் சீனிவாசனுடன் தரணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனிவாசனுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து அவரும் மனைவியை பிரிந்து வாழ்கிறார். சீனிவாசனும், தரணியும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு 11 மணியளவில் தரணி இறந்துவிட்டதாக போனில் வள்ளியம்மாள் பரந்தாமனிடம் தெரிவித்துள்ளார்.
18-ம் தேதி அங்கு சென்றபோது, தரணியின் பின்தலையில் காயம் இருந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசில் பரந்தாமன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “சீனிவாசனுக்கும், வனிதாவுக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளது.
வனிதாவை பிரிந்து அவர் தனியாக வாழ்ந்துள்ளார். இதன்பிறகு தரணியுடன் வாழ்ந்துள்ளார்.
வரதட்சணைக் கேட்டு தரணியை சீனிவாசன் அடித்துள்ளார். இதனால் சமீபத்தில் 45 ஆயிரம் ரூபாயை தரணியின் அப்பா பரந்தாமன் கொடுத்துள்ளார்.
இதன்பிறகும் தரணிக்கும், சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தரணியின் தலையை சுவற்றில் மோதியுள்ளார்.
இதில் அவர் இறந்துள்ளார். இதனால் கொலையை மறைக்க அவரது வாயில் விஷத்தை ஊற்றியுள்ளார்.
விஷம் குடித்து இறந்து விட்டதாக தரணியின் குடும்பத்தினரிடம் சொல்லி நாடகமாடியுள்ளார்.
சீனிவாசனிடம் விசாரணை நடத்தியபோது விஷம் குடித்த தகவலையே அவர் முதலில் சொன்னார்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் தரணியை சீனிவாசன் கொலை செய்தது தெரிந்தது. இதனால் அவரை கைது செய்துள்ளோம்” என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “சம்பவத்தன்று தரணி, செல்போனில் பாட்டு கேட்டு கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டுக்கு வந்த சீனிவாசன், டி.வி சத்தமாக வைத்துள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், தரணியை பிடித்துத் தள்ளியுள்ளார் சீனிவாசன்.
அப்போது சுவரில் மோதி அவர் இறந்துள்ளார். தரணியின் மரணத்துக்கு செல்போன் காரணமாக இருந்தாலும் சீனிவாசன், வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தியுள்ளார்” என்றார்.