மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து எனது குடும்பத்தை சீரழித்ததால் மருமகனை கொன்று புதைத்தேன் என்று கைதான மாமனார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காட்பாடி அடுத்த கரசமங்கலம் கீழ்ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பழனி (வயது 32), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி குப்பு.
இவர்களுக்கு கார்த்தி (12), திவாகர் (11) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி வீட்டில் இருந்து பழனி வெளியே சென்றார். அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதுகுறித்து பழனியின் தாய் லட்சுமி லத்தேரி போலீசில் தனது மகன் மாயமானதாக 9-ந் தேதி புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பழனியின் மாமனார் சுந்தரேசனை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுந்தரேசனும், சிங்கார ரெட்டியூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (42) என்பவரும் சேர்ந்து பழனியை கொலை செய்து, உடலை பொன்னை அருகே உள்ள பொன்னை ஆற்றில் புதைத்தது தெரியவந்தது.
இதையடுத்து லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் ஆகியோர் சுந்தரேசன், சேகரை அழைத்துக்கொண்டு பொன்னை அருகே கீரைசாத்து பகுதிக்கு நேற்று காலை வந்தனர்.
பின்னர் பொன்னை ஆற்றில் பழனியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை இருவரும் அடையாளம் காட்டினர்.
அதைத் தொடர்ந்து பழனியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் உடலின் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து லத்தேரி போலீசார் பழனியின் மாமனார் சுந்தரேசன், ஆட்டோ டிரைவர் சேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பாக சுந்தரேசன் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
எனக்கு ஏற்கனவே 2 தடவை திருமணமாகி இரு மனைவிகளும் இறந்து விட்டனர்.
பெங்களூரில் கணவரை இழந்து குப்பு என்கிற பெண் குழந்தையுடன் வசித்த காசியம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டது.
அவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டேன். மகள் குப்புக்கு பழனியை மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தோம். பழனி வேலைக்கு செல்லாமல் எனது மகளை அடித்து துன்புறுத்தி வந்தார். இதனை தட்டிக் கேட்ட என்னையும் தாக்கினார்.
மேலும் எனது மனைவி காசியம்மாளுடன் பழனிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதை சிலர் என்னிடம் தெரிவித்தனர். இதனையறிந்த எனது மகள் குப்பு கணவனை பிரிந்து வந்து விட்டார்.
பழனி எனது மனைவியுடன் சேர்ந்து எங்கள் வீட்டை ரூ.7 லட்சத்துக்கு விற்று விட்டார். அந்த பணத்தில் எனது மனைவியும் அவரும் உல்லாசமாக செலவழித்தனர். இதனால் எனது குடும்பம் சீரழிந்து விட்டது.
இதற்கு காரணமான பழனியை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். சம்பவத்தன்று பழனி மதுபோதையில் இருந்தார். அவரை சேகர் ஆட்டோவில் ஏற்றி பொன்னை ஆற்றுக்கு சென்றோம். மேலும் மது குடித்த பழனி சுயநினைவு இல்லாமல் கிடந்தார்.
ஆட்டோ டிரைவர் சேகரிடம் பொன்னைக்கு சென்று மண் வெட்டி வாங்கி வருமாறு கூறினேன். அவரும் வாங்கி வந்தார். இருவரும் சேர்ந்து லுங்கியால் பழனியை கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.
பின்னர் ஆற்று மணலில் குழிதோண்டி புதைத்து விட்டு வந்து விட்டோம். எதுவும் நடக்காதது போல இருந்தோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.