உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்த 20 நிமிடங்களில் கணவரும் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
இருவரும் உயிரிழந்த அறையில் இருந்த கடிகாரமும் நின்று போனது தான் ஆச்சரியமான விடயமாக உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி மற்றும் ஜெனட் தம்பதிகளுக்குத் திருமணமாகி 63 வருடங்கள் ஆகின்றன.
கடந்த சில வருடங்களாக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஜெனட், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.
தனது மனைவியை தினந்தோறும் மருத்துவமனையில் சென்று பார்ப்பதை 86 வயதான ஹென்றி வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில், ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹென்றி, தனது மனைவி இருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 31 ஆம் திகதி தம்பதிகள் இருவருக்கும் உடல்நிலை மோசமடைந்தது.
அன்று அதிகாலை 5.10 மணியளவில் ஜெனட் மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து 20 நிமிடங்கள் கழித்து ஹென்றியும் உயிரும் பிரிந்தது.
இருவரும் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த கடிகாரம் ஹென்றி இறந்த நேரமான 5.30 மணிக்கு மேல் ஓடாமல் அப்படியே நின்றுவிட்டதாக அவருடைய மகன் தெரிவித்தார்.
63 வருட தாம்பத்திய வாழ்க்கையில் இணைபிரியாத கணவன், மனைவியாக இருந்த ஹென்றி-ஜெனட் தம்பதியினர் மரணத்திலும் இணைபிரியாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.