யாழ்.மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் 11பேர் அடங்கிய மிகப்பெரிய கொள்ளைக் கோஷ்டியொன்றை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஸ் புதன்கிழமை (15) தெரிவித்தார்.
அத்துடன், மேற்படி கொள்ளைக் கோஷ்டியிடமிருந்து 1 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும அவர்; தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, பழம் வீதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபரிடம், புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபர் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல திருட்டுக்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, பதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்படி சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் 90 நாள் அனுமதி பெறப்பட்டு சந்தேகநபர் விசாரணை செய்யப்பட்டார்.
இதன்போது, மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 20, யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் 12, சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 02, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 03, கோப்பாய் பொலிஸ் பிரிவில் 05, தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் 01 மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவில் 03 ஆகிய திருட்டு நடவடிக்கையில் சந்தேகநபருடன் இணைந்து மேலும் சிலர் ஈடுபட்டமை தெரியவந்தது.
இதனையடுத்து, திருட்டுடன் ஈடுபட்ட ஏழாலை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்தும் 36 மோட்டார்கள், 61 பவுண் நகைகள், 01 காஸ் சிலிண்டர், 01 நீர்இறைக்கும் இயந்திரம், 01 கமரா, 12 புடவைகள், 03 அலைபேசிகள், 01 தொலைக்காட்சி, 03 மேசை உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டன.
அத்துடன், கொள்ளையடித்த நகைகளை வங்கியில் அடைவு வைத்து அதன்மூலம் பெற்ற பணத்தை கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட படி ரக வாகனமும் மீட்கப்பட்டது.
தொடர்ந்து, இருவரும் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், முதலாவது பிரதான சந்தேகநபரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும், கொள்ளை நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டனர்.
அனைவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (15) ஆஜர்ப்படுத்திய வேளையில் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
குடிபோதையில் 15 வயதான மகளை கட்டையால் தாக்கிய தந்தை கைது
15-10-2014
யாழ்ப்பாணம், கரவெட்டி கிழக்கு, கட்டைவேலி பகுதியில் மகளை பொல்லால் தாக்கிய தந்தையை புதன்கிழஇமை (15) கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட நபர், மதுபோதையில் புதன்கிழமை (15) காலை வீட்டுக்கு வந்து, தனது 15 வயது மகளை பொல்லால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மகள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார், தந்தையான சந்தேகநபரை கைது செய்தனர்.
சந்தேகநபரை வியாழக்கிழமை (16) யாழ்.சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.