மன்னார் மனிதப் புதைகுழி அரைநூற்றாண்டுக்கு உட்பட்டதே. இதுதொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனிதஉரிமைகள் ஆணையம் பரிந்துரைக்கும் தடயவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை வெளிக் கொணர முடியும் என்று இந்தியாவின் தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அந்தப் புதைகுழி கி.பி1400- கி.பி.1650 காலத்திற்குரியது என்று பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுஇதனையடுத்து பல்வேறு கருத்துக்களும் சந்தேகங்களும் பொதுவெளியில் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மன்னார் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளின் போது அதனை நேரில் பார்த்தவர் என்ற அடிப்படையில் காபன் அறிக்கையின் பிரகாரம் குறிப்பிடப்பட்டுள்ள போர்த்துக்கேய கால மனித எச்சங்களாக இவை இருக்குமாக இருந்தால் இதுவரை மண்ணில் மக்கிப்போகாது இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா? இந்த விடயத்தில் உண்மைகளைக் கண்டறிவது என்றால் அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்தியாவின் தடயவியல் நிபுணரும், பேராசிரியருமான சேவியர் செல்வ சுரேஷ் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு மின்னஞ்சல் ஊடாக கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மனித எச்சங்கள் மண்ணின் தரம் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப அது பாதுகாக்கப்படும் காலம் வேறுபடும். நான் நேரில் பார்த்த தடயவியல் மருத்துவர் என்ற முறையில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்கு உட்பட்டதல்ல என்றும் அது அரை நூற்றாண்டுகளுக்குள் புதைக்கப்பட்ட எலும்புகள் என்றும் கூற முடியும்.
இலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவமுள்ள தடயவியல் ஆய்வாளர்கள் இல்லை என்பது என் கருத்து. இவர்கள் உபயோகித்த காபன் டேட்டிங் முறை தவிர்த்து மனித எலும்புக்கூட்டில் உள்ள பல்லை வைத்து சரியான பிறந்த நாளையே கண்டுபிடிக்க முடியும். சர்வதேச மனிதஉரிமைகள் ஆணையம் பரிந்துரைக்கும் தடயவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை வெளிக்கொணர முடியும் என்றார்.