துயருவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்” அவ்வாறிருந்தபோதும் முதல் துயரத்தில் சிதறிய நெஞ்சத்துடன் வெளியான கண்ணீரின் ஈரம் காய்வதற்குள் அடுத்தடுத்து இழப்புக்கள். தோல்விகள். வலிகளைத் தாண்டி வாழ்க்கையையே வெறுக்குமளவிற்குச் செல்கிறார் தாயொருவர்.
ஆம், மூன்று பிள்ளைகள் இறந்தபின்னும் கணவனுக்காகவும் மகளுக்காகவும் வாழத்துடித்த எனக்கு பட்டகடனை அடைக்கவோ பசிக்கு ஒருவேளை சாப்பாடு வழங்கவோ வழி தெரியாமல் தவிக்கும் நான் மரணத்தை அழைத்தாலும் அது கூட இந்த ஏழைத்தாயை ஏற்க மறுக்கிறது.
கண்ணீருடன் கதறுகிறார் ஞானபாலன் விஜயராணி என்ற 53 வயதுடைய அவலத்தாய்.
இலங்கை வரலாற்றில் மூன்று தசாப்தங்களாக இனரீதியாக ஆரம்பிக்கப்பட்ட முரண்பாடுகள் பிரதேச ரீதியாகவும் உரிமைப் போராட்டமாகவும் மிளிர்ந்தது சகலருக்கும் தெரியும்.
இருந்தாலும் பெற்றோர் பல கனவுகளை சுமந்து பிள்ளைகளைப் பெற்று தமக்கான இறுதிக் காலத்தை பிள்ளைகளுடன் கழிக்கவேண்டும். என்ற எதிர்பார்ப்புடன் ஆரம்பமான குடும்பம் தான் இந்த ஞானபாலன் விஜயராணி குடும்பம்.
எங்களுக்கு சொந்த வீடு இல்லை என்றாலும் என்ர கணவர் கூலி வேலை செய்து கொண்டு வரும் பணத்தில் நான்கு பிள்ளைகளையும் நன்றாக வளர்த்தேன்.
என்ர பிள்ளையளுக்கென்று பார்த்து பார்த்து ஒவ்வொரு விடயத்தையும் செய்து வந்த நான் 1995ஆம் ஆண்டு வலிகாமம் பிரச்சினை தொடங்கும் போது எல்லாப்பிள்ளையலும் இளம் பருவம் வச்சிருந்தா எங்க போறாங்களோ தெரியாது என்றிட்டு 2000ஆம் ஆண்டு மேசன் வேலை ஒப்பந்தம் எடுத்து அனுப்பினார்கள்.
அங்க பிள்ளை வேலைக்கு போறநேரம் 2000.05.10ஆம் திகதி ஷெல்விழுந்து இறந்திட்டார். அவர் இறக்கும் போது (வயது 26) அதன்பிறகு என்ர இரண்டாவது மகன் கூலிவேலை செய்து இரவில மேசன் வேலையையும் செய்து கணவற்ற உழைப்போட நல்லா இருந்தம்.
ஆனால் யார் கண்பட்டதோ தெரியாது மூத்தவர் செத்து 6 மாதத்தில இரண்டாவது மகன் 2000.12.19 ஆம் திகதி அவன்ர 19ஆவது வயது பிறந்தநாளன்று கொடிகாமச் சந்தைக்கு மீன் வாங்கப் போன பிள்ளையை மாலைவரை காணேல்ல என்று தேடிப்போக சந்தையில இருந்தவை சொல்லிச்சினம் சந்தைக்க நின்ற கனபெடியள ஆமி பிடிச்சு ஏத்திற்று போனது.
அதில உங்கட மகனையும் பிடிச்சதை கண்ட நாங்கள் என்று ஆனால் நாங்கள் அந்த நேரம் முதல் ஒவ்வொரு ஆமிக்காம்பாக போய் தேடினம் எந்த ஒரு இடத்திலையும் நாங்கள் பிடிக்கேல்ல என்று சொன்னார்கள்.
ஆனால் பிடிச்ச ஆட்கள்ள இருந்து தம்பி வந்தவர்கள் சொன்னார்கள் இராணுவம் அவரை படுகொலை செய்து விட்டது என்று.
என்ர இரண்டு பிள்ளைகளும் செத்திட்டினம். மூத்தவற்ற பிரேதத்தை என்றாலும் பார்த்தன். இரண்டாவது மகன்ர பிரேதத்தை கூட அவர்கள் தரவில்லை. (ஆனால் இருவரும் அகாலமரணம் அடைந்து விட்டார்கள் என்று மரண அத்தாட்சி பத்திரம் இருக்கு)
மூன்றாவது மகன் இவர்கள் இருவருக்கும் முதலே இறந்திட்டார். காரணம் பிரச்சினை கூடி 1998இல் நாலுபக்கமும் தென்மராட்சியில ஷெல்லுகள் விழ காய்ச்சல் காய காய பனடோல் கூட இல்லாத நேரத்தில மல்லிய அவிச்சு குடுத்து வச்சிருந்தன்.
பிள்ளைக்கு வலிப்பு வந்து செத்துபோனார். சாகும்போது இளையவனுக்கு 15வயது. மூன்று பிள்ளையலையும் சாகக் குடுத்திட்டு என்னத்துக்கு நாங்கள் உயிரோட இருக்கவேண்டும்.
என்று பலமுறை யோசிப்பம் நானும் கணவரும். ஆனால் மூன்று சகோதரத்தையும் சாகக் குடுத்திட்டு என்ர பொம்பிளப்பிள்ளை தனிமரமா நிற்குதே என்று நானும் மனுசனும் கூலிவேலை செய்து பொம்பிளப்பிள்ளையை படிப்பிச்சு நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டும் என பாடுபட்டம்.
முடியேல்ல காரணம் மூன்று பிள்ளைகளின் மரணத்தோட கணவரும் மரணப்படுக்கைக்கு போற அளவிற்கு அவருக்கு புற்றுநோய் வந்திட்டுது.
இதால நான் தெரிந்த இடத்தில மகளை கட்டிக் கொடுத்துவிட்டேன். மகளை கட்டிக் கொடுக்கும் போது எங்கட கையில எதுவுமே இல்லை. வெறும் பெண்ணை கட்டிக் கொடுத்தோம்.
மூன்று பிள்ளைகளையும் சாகக் கொடுத்தனாங்கள் ஒரு பிள்ளையாவது வாழ வைக்கவேண்டும் என்று தினம் தினம் போராடினோம்.
அவாவின் திருமணவாழ்வு பொருளாதாரம் இல்லாவிட்டாலும் நல்ல மகிழ்வாக அமைந்தது. அவாக்கு 12, 8, 5 வயதில மூன்று மகள்மார் இருக்கினம்.
அந்த மூவரையும் நான் என்ர மகன்மார் என நினைத்தே பார்த்து பார்த்து வளர்ப்பேன். அவளும் தன்ர சகோதரம்தான் தனக்கு வந்து பிறந்ததென்று தினம் தினம் கூறி கவலையை ஆழ்த்துவாள்.
எல்லோரையும் சாகக் குடுத்திட்டு இருக்க வீடு இல்லாம திரிஞ்ச நேரம் வறணி வாழைத்தோட்ட சேச்சிற்கு முன்ன ஒரு வீட்டில இருக்கிறம்.
அந்த காணி சேச்சிற்குத்தான் சொந்தம். ஆனாலும் எங்கட நிலைமையை அறிந்து எங்களுக்கு அந்தக் காணியில வாடகை ஒன்றும் இல்லாமல் இருக்கத்தந்திருக்கிறார்கள்.
என்ர கணவர் புற்று நோயால நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்தவர். அவருக்கு மருத்துவச் செலவுக்கு போக்குவரத்திற்கு என்றெல்லாம் செலவுகள் வரவர என்ர மகளின்ர ஒவ்வொரு நகையையும் அடைவுவைச்சு அப்பாவையாவது இறுதி நேரத்தில் காப்பாற்றுவம் என்று எவ்வளவோ போராட்டம்.
அதுவும் முடியவில்லை. எங்கே நாங்கள் நிம்மதியாக இருந்து விடுவோமோ என நினைச்சே நாளுக்கு நாள் தண்டிக்கப்பட்டு வந்தோம்.
கடைசியில 2013 ஆம் ஆண்டு நான்காவது உயிராக அவரையும் பறிகொடுத்து விட்டோம். ஒரே வீட்டுக்கு 4 பேரை சாகக் குடுத்திட்டம்.
இருக்கிற மூன்று பேரப்பிள்ளைகளையாவது படிப்பிச்சு நல்ல நிலைக்கு கொண்டு வருவம் என்று நானும் மகளும் மருமகனும் 2013இல் இருந்து போராட ஆரம்பிச்சம். ஆனால் எங்கட போராட்டம் கானல் நீராகவே மாறி வருகிறது.
எங்கட மருமகன் 1988இல் இந்தியனாமி பிரச்சினைக்கு அவரைப்பிடிச்சு கட்டிப்போட்டு அடிச்சவை. கனநாளாக அவரை அப்படி சித்திரவதை படுத்தி விடுதலை செய்தார்கள்.
அதன்பின் அவர் நன்றாக வேலை செய்து அவற்ற குடும்பத்தையும் பார்த்து எங்கட குடும்பத்தையும் பார்த்து வந்தவர்.
அவற்ற சகோதரியும் யுத்தத்தால இளம் வயதிலேயே விதவையாக்கப்பட்டு இருக்கிறா. இவ்வாறு தினம் தினம் கஷ்டப்பட்டு இரண்டு குடும்பத்தையும் பார்த்து வந்த மருமகனுக்கு பழைய நோ இப்ப பாதிப்பை ஏற்படுத்தி எழும்ப முடியாம, நடக்க முடியாம இருக்கிறார்.
கிழமைல இரண்டு நாளைக்கு வேலைக்கு போவார். மீதி 5 நாளும் வீட்டில தான் இந்த நிலைமைல நானும் அவர்களுடன் இருக்கிறன்.
அவர் (மருமகன்) வேலைக்கு போனால் ஒரு நாளைக்கு 1000 ரூபா கிடைக்கும். கிழமையில 2ஆயிரம் ரூபா எடுத்து மூன்று பிள்ளையும் படிப்பிச்சு நாங்கள் மூவரும் சாப்பிட எவ்வாறு காசு காணும்.
அடைவு வச்ச நகை என் கண்முன்னால ஆட்களின்ர உயிர் போனமாதிரி ஏலத்தில போட்டுது. என்ர கணவர் செத்தபோது ஆஸ்பத்திரியால பிரேதம் கொண்டுவந்ததில இருந்து செத்தவீடு எல்லாத்திற்கும் சேர்த்து ஒரு இலட்சம் செலவானது.
அது கூட கடன்பட்டு செத்தவீடு செய்து முடிச்சாச்சு. பட்ட கடனை அடைக்கிரத்திற்கு தினம் தினம் நான் போராடி வருகின்றன். கடன் தந்தவர்கள் நிற்க விட்டிட்டு கேள்வி கேட்கிறார்கள். அதை பார்த்தே நானும் மகளும் பிள்ளையலும் நாளுக்கு நாள் அணு அணுவாக சாகடிக்கப்படுகிறோம்.
யாழ். ஆயர் இந்த காணியில நாங்கள் இருக்கட்டும் என்று கைப்பட கடிதம் தந்தவர். அந்த கடிதத்தை வச்சு நான் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு பதிஞ்சனான். திட்டம் கிடைத்து விட்டதாக கடிதம் வந்தது.
காசுக்கு போனால் உங்கட பெயரில் உறுதி இல்லை. கடிதத்தை வச்சு வீட்டுத்திட்டம் தரேலாது என்று சொல்லிவிட்டார்கள்.
நாங்கள் இப்ப இருக்கிற வீடு சுத்தவர சிவரெல்லாம் வெடிப்பு. லைற் இல்லை. பிள்ளையள் லாம்பில படிப்பினம்.
லாம்புக்கு எண்ணெய் வாங்க காசு இல்லை என்றால் வீட்டில் ஏழுமணியோட விளக்கும் அணைக்கப்பட்டு விடும். தெரு வெளிச்சத்தை நம்பியே எங்கட இரவு வாழ்க்கை போகுது. இதனால பிள்ளையளின்ர கல்வி பாதிக்குது.
வளர்ற பிள்ளையளுக்கு ஒழுங்கான சாப்பாடு இல்லை. குந்தி இருக்க இடமில்லை. மருமகனுக்கு குடிக்கிற மருந்துக்கு ஒரு மாப்போத்தல் வாங்கக் கூட காசு இல்லை.
எனக்கு இப்ப 53 வயது. என்ர மகளுக்கு 30வயது. வாழ வழிகேட்டு போகாத இடமில்லை. குடுக்காத கடிதம் இல்லை. பதியாத நிறுவனமில்லை. பேசாத மனிதரில்லை.
என்ன செய்வது விதியை நோவதா? அல்லது விதித்தவனை நோவதா? என்று தெரியாமல் வாழ்ந்து வருகிறேன். என்ர நிலையை உணர்ந்து யாராவது உதவி செய்ய நினைத்தால் என்ர குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி செய்யுங்கள். ஒரு வேளை கஞ்சியையோ கூழையோ குடிக்க வழிவகை செய்யுங்கோ.
தானதருமங்கள் எத்தனையோ எங்கெங்கோ எத்தனையோ தனவந்தர்கள் முன்றியடிக்கிறார்கள். வலிகளால் வதங்கி வாழ்க்கையே முடியாதா என்ற நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கும் இவர்களின் வயிற்றுப் பசியை போக்கினால் இப்பிறப்பில் நாம் செய்யும் அதியுச்ச தானமாகவும் தருமமாகவும் அமையுமல்லவா!
சிந்துஜா பிரசாத்