ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு, மலையக மக்களை ஏமாற்றிவிட்டார். இப்படி ஒரு அரசியல் மாற்றம் நடைபெறும் என்று நாங்கள் சற்றுகூட எதிர்பார்க்கவில்லை. அந்தவகையில் நாங்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றோம்.
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் நியமனம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்கள் கூட என்னை மஹிந்தவுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மறுத்துவிட்டேன். அவர்களின் கோரிக்க எனக்கு அது கவலையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் கேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
செவ்வியின் முழு விபரம் வருமாறு:
கேள்வி: 26 ஆம்திகதி வெள்ளிக்கிழமை நடந்தது என்ன?
பதில்: வெள்ளிக்கிழமை இரவு ஜனநாயக சதியே இடம்பெற்றது. வடக்கு, கிழக்கில் ஒருகாலத்தில் யுத்தம் இருந்தது தென்னிலங்கையிலும் மோதல்கள் இருந்தன.
ஆனால் எந்தவொரு கட்டத்திலும் இந்தநாட்டில் அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சிமாற்றங்கள் ஏற்படவில்லை, தெற்காசியாவில் பல நாடுகளில் அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருந்தன.
ஆனால் இலங்கையில் அவ்வாறு இடம்பெறவில்லை. இது குறித்து நாம் பெருமைபடவேண்டும். எனினும் தற்போது அந்த துரதிஷ்ட நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. தேர்தலில் வெற்றிபெற்ற அணியிடமிருந்து ஆட்சி தட்டிப்பறிக்கப்பட்டிருக்கின்றது.
கேள்வி: அரசியலமைப்பு ரீதியில் இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: அரசியலமைப்பு தொடர்பாக பல்வேறு தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவை நாம் இன்னும் பிரதமராக ஏற்கவில்லை. பாராளுமன்றமும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
இடைப்பட்ட நாட்களில் மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கும் செயற்பாடுகளும் இடம்பெறலாம். இது ஒரு சிறுபிள்ளைக்கும் தெரிந்த விடயமாகும்.
கேள்வி: இந்தப் பின்னணியில் 2020 இல் இந்த நாட்டில் என்ன நடக்கும்?
பதில்: 2020 இல் மனோ, ஹக்கீம், ரிஷாத், உள்ளடங்கிய ஐக்கிய தேசிய முன்னணி பாரிய வெற்றிபெறும். இதனை ஒரு கட்சியாக நாம் பதிவுசெய்வோம். ஐ.தே.க. வின் தலைவர் ரணிலா சஜித்தா என்பது எமக்கு முக்கியமல்ல. ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து 2020 இல் வெல்லுவோம்.
கேள்வி: இப்படி ஒரு நிகழ்வு இடம்பெறும் என எதிர்பார்த்தீர்களா?
பதில்: சற்றுகூட எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் நியமனம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சஜித் பிரேமதாஸ, மத்துமபண்டா, கருஜயசூரிய ஆகியோரை பிரதமர் பதவியேற்கும்படி தான் கோரியதாகவும் அவர்கள் முடியாது என்று கூறியதால் மஹிந்தவை நியமித்ததாகவும் ஜனாதிபதி கூறுகிறார்.
அப்படியானால் மஹிந்த அமரவீரவை நியமித்திருக்கலாமே? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு, மலையக மக்களை ஏமாற்றிவிட்டார்.
கேள்வி: உங்களுக்கு மஹிந்த தரப்பிலிருந்து அழைப்பு வந்ததா?
பதில்: மஹிந்த ராஜபக்ஷவுடன் என்னை இணைந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு வந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினர்.
நேரடியாகவும் அழைப்பு வந்தது. நான் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலளித்தேன். எனது நிலைப்பாட்டை நேரடியாக கூறினேன்.
பல்வேறு மட்டங்களில் பேரம் பேசல்கள் வந்தன. புலம்பெயர் தமிழர்கள் கூட என்னை மஹிந்தவுடன் இணையுமாறு கூறினர். எனக்கு அது கவலையாக இருந்தது. மனோ கணேசன் மனம் தளராதவன்.
கேள்வி: இனித்தீர்வுத்திட்டமே சாத்தியமாகாதா?
பதில்: வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் மக்கள் நல்லாட்சி அரசில் தீர்வுகிடைக்கும் என நம்பினர். ஆனால் எனக்கு ஒரு சந்தேகமே இருந்தது. அதாவது தமிழர்களுக்கு நியாயம் கிடைப்பது சாத்தியம் இல்லை என்று அவ்வப்போது கூறிவந்தேன்.
அப்போது என்னை சிலர் திட்டினர். ஆனால் நான் கூறியது இன்று சரியாகிவிட்டது. அதற்காக நான் கவலைப்படுகின்றேன். ஆனால் நாம் முற்போக்கு கூட்டணியாக ஐ.தே.க.வுடன் இணைந்து அடுத்த அரசாங்கத்தில் நிச்சயம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண்போம்.