வவுனிய, மாமடுக் குளத்தில் மூழ்கி யுவதிகள் இருவரும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் வவுனியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தலைமுறையினர் சந்தோஷமாகப் பொழுதைக் களிப்பதற்காக விபரீதமான பொழுதுபோக்கில் ஈடுபடுகின்றனர்.
இதனால் உயிரிழப்புகளும் அதிகம் சம்பவித்துள்ளன. அந்த வகையில் மூன்று இளவயதினர் ஒன்றாக உயிரிழந்த இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வவுனியாவைப் பொறுத்தமட்டில் குளங்கள் அதிகமுள்ள பிரதேசமாகும். இதனை உள்ளூர்வாசிகள் மட்டுமன்றி பலரும் சென்று ரசிப்பதும், தோணியில் பயணிப்பதும் வழமையான ஒன்று. அந்த வகையில், நான்கு யுவதிகளும் இரு இளைஞர்களுமாக அறுவர் மாமடு குளத்தினை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
குளத்தைப் பார்வையிட்ட இவர்கள், மீன்பிடிக்காக பயன்படுத்தும் சிறிய வள்ளத்தில் ஏறி குளத்துக்குள் செல்ல முற்பட்டபோது, வள்ளம் பாரம் தாங்காது மிதவை முறிந்து குளத்தில் கவிழ்ந்ததில் நீரிழ் மூழ்கியுள்ளனர்.
இவர்களில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் தெய்வாதீனமாக கரை சேர்ந்த நிலையில், மேலும் இரு யுவதிகளும் ஓர் இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.
விநாயகபுரத்தை சேர்ந்த என். சங்கீதா (26 வயது), செட்டிக்குளத்தைச் சேர்ந்த ஜோசப் ஜென்சி (வயது 26), திருநாவற்குளத்தை சேர்ந்த எஸ். உசாந் (வயது 20) ஆகியோரே நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.
விபத்தில் உயிர் தப்பிய யுவதி ஒரு வர் சம்பவம் பற்றி விபரிக்கையில், “நானும் எனது நண்பர்கள் மூவரும் பயிற்சி வகுப்பொன்றை நிறைவு செய்த பின்னர், சின்னபுதுக்குளத்தில் உள்ள நண்பியொருவரை சந்திப்பதற்காக சென்றிருந்தோம்.
அவ்வேளையில் குளத்தினை பார்வையிடுவதற்கு ஆர்வமாக இருந்தமையினால் சின்னபுதுக்குளத்தில் உள்ள நண்பியின் தம்பியையும் அழைத்துக்கொண்டு மாமடு குளத்திற்கு சென்றோம்.
குளக்கரையிலிருந்த வள்ளத்தில் ஏறி புகைப்படம் எடுத்துவிட்டு சிறிது தூரம் வள்ளத்தில் நகர முற்பட்டவேளை அது கவிழ்ந்து விட்டது” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
காலை வேளையில் அழகுக் கலை வகுப்பொன்றிற்குச் சென்றிருந்த இவர் கள், அன்றைய தினம் நண்பி ஒருவரின் பிறந்த நாள் என்பதால் அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து அந்த நண்பியின் சகோதரனையும் அழைத்துக்கொண்டு மாமடுக் குளத்தைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர். குளத்தைப் பார்வையிட்ட இவர்கள், ஆர்வ மிகுதியால் குளத்தினுள் பிரவேசிக்க எண்ணியுள்ளனர்.
அதற்கமைய அங்கு வைக்கப்பட்டிருந்த சிறிய படகில் ஏறி செல்வதாய் முடிவு செய்துள்ளனர். இரண்டு பேர் மாத்திரம் செல்லக் கூடிய படகில் ஆறுபேர் பயணித்துள்ளனர். குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்று புகைப்படம் பிடிப்பதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கரையிலிருந்து சிறுது தூரம் சென்றதும் படகின் மிதவை உடைந்துள்ளது. மிதவை உடைந்த அடுத்த கணமே படகு கவிழ்ந்துள்ளது. இதனால் பட கில் சென்ற ஆறுபேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
மூவர் நீந்துவதற்கு முயற்சி செய்தும் வேறுசில உத்திகளைப் பயன்படுத்தியும் ஒருவாறாக கரை சேர்ந்துள்ளனர். கரை சேர்ந்தவர்கள் கூக்குரலிட்டு அயலில் இருந்தவர்களை அழைத்துள்ள னர்.
அந்த நேரத்தில் குளத்திற்கு பக் கத்தில் யாரும் இருக்கவில்லை. மீன்பிடியில் ஈடுபடுவோர் முதலான யாரும் இல்லாத நேரமான, காலை 10.00 மணி யளவிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தக் குளத்தின் கரைப் பகுதியிலேயே 16 அடி ஆழமான நீர் இருப்பதாகவும் சுழி நிறைந்த குளம் எனவும் மாமடுப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்ற னர்.
இதேநேரம் அவர்களின் நண்பியும் மாமடுவைச் சேர்ந்தவருமான யுவதி ஒருவர் தான் குளத்துக்குள் வரவில்லை என்றும். கரையில் இருப்பதாகவும் தெரிவித்து குளக்கரையில் இருந்துள்ளார்.
அவருக்கு நன்கு நீச்சல் தெரியும். இதனால் இவர் படகு குளத்தில் மூழ்கியதும். உடனடியாக குளத்துக்குள் குதித்து இரண்டு யுவதிகளையும் காப்பாற்றியுள்ளார். ஏனைய மூவரையும் தேடிப் பார்த்த போதும் அவர்கள் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
உயிர் பிழைத்த மூவரும் குளத்திற்கு அருகிலிருந்த வீடுகளுக்குச் சென்று தமது நண்பர்கள் குளத்தில் மூழ்கி விட்டதாக தெரிவித்ததையடுத்து, மாமடுப் பிரதேச மக்கள் திரண்டுவந்து குளத்தில் காணாமற் போன மூவரையும் தேட ஆரம்பித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் ஜான்சியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரின் உடல் சேறில் சிக்குண்டு காணப்பட்டதாக உடலை மீட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன் அவர் நீருக்கு வெளியே வருவதற்கு கடுமையாக முயற்சித்துள்ளார் என்றும், அதற்கான தடயங்கள் அவரது உடலில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சேற்றுப் பகுதியையும், நீர் தாவரங்களையும் அவர் கைகளால் பற்றிப் பிடித்தவாறு இருந்ததாக ஜான்சியின் உடலை மீட்டவர்கள் தெரிவித்தனர். அரை மணித்தியாலத்தின் பின்னர் உசாந் என்ற இளைஞனின் உடலும், சங்கீதா என்ற யுவதியின் உடலும் மீட்கப்பட்டுள்ளன.
“இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நாங்கள் குளத்துக்குச் சென்றிருக்க மாட்டோம். எங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று அந்த நேரத்தில் தெரியவில்லை.
நான் மாமடுப் பிரதேசத்தில் வசித்து வந்தாலும் இவ்வளவு பெரிய ஆபத்து எமக்கு இந்தக் குளத்தால் ஏற்படும் என்று சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. என் கண்முன் எனது நண்பர்கள் குளத்தில் மூழ்கியதைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.
எனக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் இரண்டு நண்பிகளைப் போராடிக் காப்பாற்றினேன். மற்றவர்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களின் குடும்பத்தினரிடம் மிகவும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன்.
£எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை” என்று மாமடுப் பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி தெரிவித்தார்.
செட்டிக்குளத்தைச் சேர்ந்த ஜான்சி படிப்புக்காகவும், ஏனைய தேவைகளின் பொருட்டும் வவுனியாவில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். படிப்பிலும் ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கிய ஜான்சி மிகவும் துடிதுடிப்பானவர்.
ஊடகவியல் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார். இதனால் அவருக்கு மிகப்பெரிய நண்பர் பட்டாளமே உண்டு. நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். ‘ஸ்ரூடியோ’ ஒன்றை நடத்திவந்த கணவரின் தொழிலுக்கு மேலும் வலுச் சேர்க்கும் விதத் தில் அழகுபடுத்தும் கலை தொடர்பான கற்கை நெறியை இவர் பயின்று வந்துள்ளார். சம்பவ தினத்தன்று குறித்த அழகுக் கலை தொடர்பான வகுப்பில் பங்குபற்றுவதாக கணவரிடம் கூறிவிட் டுச் சென்றுள்ளார்.
“வகுப்பிற்குச் சென்ற ஜான்சி என்னுடன் மதிய உணவு உண்ண வந்துவிடுவாள் என்று நான் காத்திருந்தேன். ஆனால் அவள் இறந்து விட்டாள் என்ற செய்திதான் எனக்கு கிடைத்தது.
அவள் குளத்திற்கு செல்வதாக என்னிடம் கூறியிருந்தால் நான் அவளை அனுப்பி வைத்திருக்க மாட்டேன். அவளுக்கு பிடிவாதம் அதிகம். நினைத்ததைச் செய்து முடிப்பாள்.
ஆனால் எல்லோரிடமும் அன்பாக இருப்பாள். எப்பொழுதும் குழந்தைத் தனமும் கலகலப்பாகவும் இருக்கும் அவளுடன் என்னால் நீண்டகாலம் வாழ முடியவில்லை. ஜான்சியை மறந்து நான் எப்படி இருப்பேன். என்னை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டாளே” என்று ஜான்சியின் கணவர் பிரகாஷ் கண்ணீருடன் தெரிவித்தார்.
“எனக்கு இரண்டு பெண் குழந்தை களும் ஒரு மகனும். ஜான்சிதான் மூத்த வள் ஆனால் அவள் எங்கள் வீட்டில் கடைசிப் பிள்ளை போன்று தான் இருப்பாள்.
எதுவாயிருந்தாலும் தன க்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைப்பாள். அதற்காக பிடிவாதம் பிடிப்பாள். அவளின் தம்பி, தங்கையும் அவளுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் அவள் மிகவும் நல்லவள். எல்லோரிடமும் அன்பாக இருப்பாள்.
அதிகமாகப் பேசினாலும் மனதில் எதையும் வைத்திருக்க மாட்டாள். சண்டை போட்டாலும் அடுத்த நிமிடமே தானாக வந்து பேசுவாள். ஆசைப்பட்டதை எப்படியும் அடைந்து விடுவாள். கல்யாண விடயத்திலும் அவள் அப்படித்தான் நடந்து கொண்டாள்.
நான் அவள் இப்படி இருக்கின்றாளே என்று பலமுறை யோசித்திருக்கின்றேன். ஏன் இப்படி நடந்து கொள்கின்றாள்? என்று எண்ணியிருக்கின்றேன்.
எங்களை விட்டுப் போவதற்குத்தான் அவள் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றாள் என்று எனக்கு இப்போது தான் தெரிகின்றது. என்ர மகளை நான் பறிகொடுத்து விட்டேனே.
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் அவளை கட்டுப்படுத்தி வைத்திருப்பேன். கடவுள் என்ர பிள்ளையை மொத்தமாக பறித்து விட்டாரே” என்று கூறி ஜான்சியின் தாயார் கதறியழுதார்.
குளத்தில் மூழ்கி உயிரிழந்த மற்றைய யுவதியான சங்கீதா திருமண பந்தத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகின்றன. இவரது கணவர் லண்டனில் வாழ்கின்றார். கணவரிடம் செல்வதற்கான விசா அனுமதிக்காக சங்கீதா காத்திருந்துள்ளார்.
வெறுமையாக பொழுதைக் கழிக்க விரும்பாத இவர் அழகுக் கலை வகுப்பிற்கு கடந்த மூன்று மாதங்களாக சென்றுள்ளார். அவ்வாறு கடந்த 30 ஆம் திகதி வகுப்பிற்குச் சென்றபோதே அவர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கணவரிடம் செல்வதற்காக கனவுகளுடன் காத்திருந்த சங்கீதாவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று சங்கீதாவின் நண்பி ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.
தனது மனைவியின் வருகைக்காக காத்திருந்த கணவருக்கு சங்கீதா இறந்ததாகச் செய்தி அனுப்பப்பட்டதாகவும் அவர் மனமுடைந்துபோயுள்ளதாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
உயர்தரம் வரை படித்து விட்டு தனது எதிர்கால திட்டங்களை வகுத்துவந்த உசாந், தனது அக்காவின் நண்பிகளுடன் குளத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார்.
தனது தம்பிக்கு நேர்ந்த நிலைமை தொடர்பில் எதுவும் கூறுவதற்கே உடலில் வலுவில்லாமல் அவரது சகோதரி அழுது களைத்துப் போய் இருந்தார்.
உசாந் மிகவும் சுறு சுறுப்பானவர். விளையாட்டுக்களிலும் திறமையானவன். அவனுக்கு நீச்சலும் ஓரளவுக்குத் தெரியும். அவ்வாறிருந்தும் அவன் குளத்தில் மூழ்கி இறந்து விட்டான். அவனின் இழப்பை யாரா லும் ஈடுசெய்ய முடியாது என்று உசாந்தின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
ஜான்சி, சங்கீதா, உசாந் ஆகியோரின் மரணம் வவுனியாவையே அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. இருபது வருடங்களிற்கு மேலாக அன்போடு வளர்த்துவந்த தங்கள் பிள்ளைகளை இடையில் பறிகொடுத்துவிட்டு அவர்களது குடும்பத்தினர் புலம்பி அழுகின்றார்கள்.
இன்றைய தலைமுறையினர் தமக்கு நேரவுள்ள ஆபத்தை கவனத்தில் கொள்ளாமல் செய்யும் செயல்களால் அவர்களது குடும்பத்தினர் பரிதவித்து நிற்கின்றனர். ஆபத்து நேரிடும் என்று தெரிந்தும் தாமாக விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றார்கள்.
இதற்கு வவுனியாவில் நடந்த இந்தச் சம்பவம் சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும். எனவே, இவ்வா றான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்ப டாமல் இருக்கும் வகையில் இளைஞர், யுவதிகள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
-எஸ். ரகுதீஸ்-