வட மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சயந்தனின் தனிப்பட்ட மெய்பாதுகாவலர் என கருதப்படும் ஒருவர் பாதுகாப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தூர் சந்தியில் உள்ள சயந்தனின் வீட்டுக்கு அருகில் வைத்து இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மாவீரர் தின போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வீரசிங்கம் சுலக்ஷன் என்பவர் யாழ். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்ய பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் சயந்தனிடம் வினவியபோது தனக்கு மெய்பாதுகாவலர்கள் இல்லை என்றும் கைது தொடர்பில் எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.
‘மாவீரர் நாள் கொண்டாட விடமாட்டோம்’, ‘சுடுவோம்’ என யாழ். பல்கலையில் மிரட்டல்!
24-11-2014
யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அநாமதய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரன் ஆகியோரின் பெயர்கள் எழுதபட்ட சுவரொட்டிகளே பல்கலைகழக வளாகத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
´இவர்கள் புலிகளை உருவாக்குகின்றனர்´, ´இவர்களை சுடுவோம்´, ´மாவீரர் நாள் கொண்டாட விடமாட்டோம்´ போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சுடுவோம் என தலைப்பிட்டு மாணவர்களான நிவாஸ், தமிழ்ச்செல்வன் ,ஐங்கரன், பிரிட்டோ ஆகியோரின் பெயரும் ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரனின் பெயரும் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.
இதில் நிவாஸ் என்னும் மாணவனின் யாழ். நீர்வேலியில் உள்ள வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சென்று மாணவன் தொடர்பில் வீட்டில் இருந்தோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சென்றனர்.
விசாரணை சம்பவத்தின் பின்னர் குறித்த மாணவன் வீட்டில் தங்குவதில்லை எனவும் வேறு இடத்திலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் கடந்த வாரம் ´மாவீரர் நாள்´ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதன் எதிரொலியாகவே இச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மாணவர்கள் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.