மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில், அதனைத் திருத்துவதற்காக வீட்டுக்கு வரவழைக்கப்பட்ட உறவுக்கார இளைஞன், அவ்வீட்டிலிருந்த எட்டுவயதான சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமொன்று பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட எட்டுவயதான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நேற்று (13) கைது செய்யப்பட்ட 19 வயதான இளைஞனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சிறுமியின் வீட்டில் சமையலறையுடன் மற்றுமோர் அறை மட்டுமே உள்ளது. அவ்வீட்டுக்கு தற்காலிக இணைப்பின் ஊடாக மின்சாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மின்சாரம் கடந்த 12ஆம் திகதி இரவு திடீரென தடைப்பட்டுள்ளது.
அதனை திருத்துவதற்காக அவ்விளைஞனை வீட்டுக்கு அழைத்துள்ள அந்த தாய், குப்பி இலாம்பை பற்றவைப்பதற்கான ஏற்பாடுகளை சமையலறையில் வைத்து மேற்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், அறையின் கட்டலில் படுத்திருந்த சிறுமியை, அவ்விளைஞன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.