இலங்கையில் இனப்படுகொலையைத் தடுக்க, ஐ.நா தவறி விட்டது என்ற குற்றச்சாட்டு, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுயசரிதை நூலில் கூறப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் பிளவுபட்டு நின்றதால், சோமாலியா, இலங்கை போன்ற நாடுகளில் ஐ.நா. தோல்வியடைந்து விட்டது என்பது அவரது குற்றச்சாட்டு.
ஆனாலும், அவர்தனது நூலில் இலங்கை இனப்படுகொலை குறித்து கூறியிருந்தாலும், அவர் அதற்குமேல் எதையும் விபரிக்கவில்லை. இனப்படுகொலை உச்சக்கட்டத்தை எட்டியிருந்த காலத்தில் ஒபாமா தான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்.
ஒபாமா பதவியேற்கும் போது, போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. அதுபற்றி அவர் சுதாகரித்துக் கொள்வதற்கிடையிலேயே போர் முடிவடைந்து விட்டது. போரை விரைந்து முடிக்க வேண்டும் என்று இறுதி நாட்களில் இராணுவத்தினருக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்து கொண்டிருந்த நிலையில், அதற்குள்ளாக போரை முடித்து விட வேண்டும் என்ற அவசரம் அரச தரப்பிடம் இருந்தது.
அப்போது, களமுனையில் இருந்த இராணுவ அதிகாரிகள், தமக்கு இடப்பட்ட உத்தரவு குறித்து வெளிப்படுத்தியிருந்தார்கள்.
தனியே இந்தியாவை மனதில் நிறுத்தி மாத்திரம் அவ்வாறான அவசரம் காட்டப்பட்டது என்று கூற முடியாது.
அமெரிக்கா தரப்பில் இருந்தும், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் தரப்பினர் பலரும் கூறியிருந்தார்கள். கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஒரு தகவலை கூறியிருந்தார்.
போரின் இறுதி நாட்களில், முற்றுகையில் சிக்கியிருந்த பொதுமக்களை கப்பல் மூலம் மீட்கின்ற ஒரு திட்டம் சக்திவாய்ந்த ஒரு நாட்டின் தூதுவரால் முன்வைக்கப்பட்டது என்றும், அதனை அப்போதைய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நிராகரித்து விட்டார் என்றும், அவர் கூறியிருக்கிறார்.
இன்னொரு நாடும் இவ்வாறான உதவியை வழங்க முன்வந்துள்ளது, அதனை பரிசீலித்து வருகிறோம் என்றும்,அந்த தூதுவரை ஏமாற்றி மஹிந்தராஜபக்ஷ திருப்பி அனுப்பினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர்தான், அவ்வாறு வேறு நாடு கப்பலில் ஏற்ற முன்வந்துள்ளதா என்று மஹிந்தராஜபக்ஷவிடம் கேட்டபோது, கப்பலில் பொதுமக்களை மீட்டால் பிரபாகரன் தப்பிச் சென்று விடுவார் என்றும் அதனால் தான், அவ்வாறு கூறி சக்திவாய்ந்த நாட்டின் தூதுவரை ஏமாற்றி திருப்பி அனுப்பியதாகவும், அவர் பதிலளித்தார் என, மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் மூலம் மக்களை மீட்கும் திட்டத்துக்கு இணங்க அரசாங்கம் தயாராக இருக்கவில்லை, பிரபாகரனை தப்பிக்க விடக்கூடாது என்பதில் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருந்தார் என்று வெளிப்படுத்தியிருக்கிறார் மஹிந்த சமரசிங்க.
போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக அண்மைக்காலத்தில் வெளியாகியுள்ள இரண்டாவது தகவல் இதுவாகும்.
இதன்படி, கப்பல்மூலம் பொதுமக்களை மீட்கின்ற திட்டம் மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நிராகரிக்கப்பட்டது என்ற முடிவுக்கு வரமுடிகிறது.
ஆனால், அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஏற்பாட்டாளராக இருந்த நோர்வேயின் விசேடபிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் இந்த விவகாரத்தில் பழியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது போட்டிருந்தார்.
மஹிந்த சமரசிங்கவைப் போன்று எரிக் சொல்ஹெய்ம், சில விடயங்களை மறைத்துப் பேசவில்லை. அதாவது, எந்தநாடு இந்த முயற்சியை எடுத்தது என்பதை அவர் மறைக்கவில்லை. இந்தியா, ஐ.நாவின் ஆதரவுடன் அமெரிக்காவே அந்த மீட்பு முயற்சிகளில் இறங்கத்தயாராக இருந்தது என்றும் அவர் கூறியிருந்தார்.
2009 ஏப்ரல் மாதம் அந்த வாய்ப்பை பிரபாகரனே நிராகரித்து விட்டார் என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் தான், அவரும், அவரது தளபதிகளும், பொதுமக்களும் அழிவுகளைச் சந்திக்க நேரிட்டது என்றும் எரிக் சொல்ஹெய்ம் கூறியிரு்ந்தார். அந்த திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தால், அனைவரும் பதிவு செய்யப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டு, தென்பகுதியிலோ, அல்லது வெளிநாட்டுக்கோ கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள் என்பது எரிக் சொல்ஹெய்மின் நிலைப்பாடு.
போர் முடிந்து 11 ஆண்டுகளுக்குப் பின்னர், எரிக் சொல்ஹெய்ம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த பின்னர் தான், அரச தரப்பின் பேச்சுக் குழு தலைவராக இருந்த மகிந்த சமரசிங்க, பிரபாகரனைத் தப்பிக்க விடக்கூடாது என்பதற்காகவே, அந்த திட்டத்தை தாங்கள் நிராகரித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இரண்டுமுறை இவ்வாறான கப்பல் மீட்பு முயற்சிக்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்றை ஆரம்பக்கட்டத்திலேயே அரசாங்கம் நிராகரித்துவிட்டது. இன்னொன்றை புலிகள் தரப்பு முன்வைத்த நிபந்தனைகளுக்கு இணங்கமுடியாதென மறுத்துவிட்டது என்பது உண்மை.
இப்போது மஹிந்த சமரசிங்கவும், எரிக்சொல்ஹெய்மும் முன்வைத்துள்ள கருத்துக்களை வைத்துப் பார்க்கின்ற போது, ஒரு விடயம், தெளிவாகிறது. அரசாங்கத் தரப்பு பொதுமக்களை மீட்பது என்ற போர்வையில் பிரபாகரன் தப்பிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது என்பதே அது.
அவர்களின் முழு இலக்கும் புலிகளைத் தப்பவிடக்கூடாது என்பதாகவே இருந்தது.பொதுமக்களுககு ஏற்படக் கூடிய அபாயத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. அதேவேளை, எரிக் சொல்ஹெய்மின் கூற்றுப்படி, பிரபாகரன் தப்பிச் செல்வதற்கு தயாராக இருக்கவில்லை. அவர் நினைந்திருந்தால் அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டபோது, பயன்படுத்திக்கொண்டிருந்திருப்பார்.
அவர் தனது உயிர் ஆபத்தில் இருப்பதையிட்டு கவலைகொள்ளவில்லை. அதேவேளை, எரிக் சொல்ஹெய்ம் கடந்த செப்ரெம்பரில் டெய்லி மிரருக்கு வழங்கியிருந்த செவ்வியிலேயே ஒரு குழப்பமான கூற்றை வெளிப்படுத்தியிருந்தார். புலிகளுடனான சமாதான முயற்சிகள் இந்தியாவின் ஆதரவுடன் தான் முன்னெடுக்கப்பட்டது என்றும், அமைதியான முறையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றே இந்தியா விரும்பியது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 2008 செப்ரெம்பருக்குப் பின்னர் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது- இராணுவ தீர்வை வலியுறுத்தியது என்றும், எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார். அவ்வாறாயின், போரின் இறுதிக்கட்டத்தில், அமெரிக்கா முன்னெடுத்த முயற்சிக்கு இந்தியா எவ்வாறு ஆதரவளித்திருக்கும் என்ற கேள்வி உள்ளது.
11 ஆண்டுகளுக்கு முன்னர் முடித்து வைக்கப்பட்ட போரின், எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சியங்கள் இல்லை. சாட்சியமின்றி நடத்தப்பட்ட போர் அது. அதனால் தான் அதில் அரங்கேறிய மீறல்கள் குறித்து இன்னும் வலுவான குரல்கள் ஒலிக்கவில்லை. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கூட, தான் ஆட்சியில் இருந்த 8 ஆண்டுகளில், இலங்கையில் நடந்த இனப்படுகொலையைப் பற்றி பேசவில்லை.
இப்போது தான் அதுபற்றிப் பேசும் நிலைக்கு வந்திருக்கிறார். அதனையும் கூட அவர் ஐ.நாவின் தோல்வியாக நாடுகளுக்கிடையிலான முரண்பாட்டின் விளைவாக அடையாளம் காட்ட முனைந்திருக்கிறார். ஆனால் உண்மை அது மாத்திரமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கூட, தவறிழைத்திருக்கின்றன.
அந்த தவறுகளை மறைக்கவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை கூற முனைந்திருக்கிறார்கள். அதேவேளை, புலிகள் உள்ளிட்ட பல நாடுகளின் தவறுகளை இலங்கை அரசு தனக்குச் சாதகமானதாக்கிக் கொண்டதால் தான், போரில் வெற்றியைப் பெற்றுக் கொண்டது மாத்திரமன்றி இன்றுவரை பொறுப்புக்கூறலில் இருந்து தப்பியும் வருகிறது.