முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் போதைப்பொருட்களை பயன்படுத்திய 6 பெண்கள் உட்பட 89 பேர் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என ஹோட்டலில் பதிவு செய்து, போதைப் பொருட்கள் மதுபானம் என்பவற்றோடு களியாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே இவ்வாறு 89 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் சனிக்கிழமை அலுவலகத்திலுள்ள ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் எனக் கூறி ஹோட்டலை பதிவு செய்துள்ளனர். 6 பெண்கள் உள்ளடங்களாக 89 பேர் இந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறு களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக ஹிங்குராங்கொட பொலிஸ் நிலையத்திற்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியுடைய தலைமையில் ஹிங்குராங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நள்ளிரவு 12 மணியளவில் குறித்த ஹோட்டலில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இந்த திடீர் சுற்றி வளைப்பின் போது 6 பெண்கள் உள்ளடங்கலாக 89 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்சா, ஐஸ், ஹெரோயின் மற்றும் மேலும் சில போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டன.
அத்தோடு இவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியிருந்தமையும் விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது. குறித்த பெண்கள் அறுவரும் கைது செய்யப்படும் போது மதுபோதையில் காணப்பட்டனர்.
கைதானவர்கள் கண்டி, குருணாகல், திருகோணமலை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். குறித்த ஹோட்டலில் பதிவு செய்வதற்கு நபரொருவருக்கு 2500 ரூபாய் அறவிடப்படுகின்றது.
அத்தோடு ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் பின்னர் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்றார்.