அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், அதை நினைத்து ஆனந்தப்பட முடியாத நிலையில் தி.மு.க. உள்ளது.
காரணம், 2-ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, பா.ஜ.க. ஆட்சி அமைத்தால், வழக்கின் வேகம் மேலும் அதிகமாகலாம்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகைகள் பெற்ற தனியார் நிறுவனங்கள் கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கைமாற்றிய வழக்கில் கனிமொழி, உட்பட 19 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதனால், தி.மு.க.வுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு ஊழல், தமிழக அரசியலில் தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. சர்க்காரியா ஊழலுக்குப் பின் தி.மு.க. மாட்டிக்கொண்ட பெரிய ஊழல் இது.
ஆனால், இந்த ஊழலில் கருணாநிதிக்கு நேரடி தொடர்பில்லை என்றாலும், அவரது மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோருக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு உள்ளது என ராசா குற்றம்சாட்டிய போதிலும், மத்திய அரசோ முழுக்க முழுக்க ராசாவை நோக்கியே கையை நீட்டியது.
premium-idஇதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இதில் இல்லை என பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சரும் ப.சிதம்பரமும் ஒதுங்கிக்கொண்டனர்.
இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் மற்றும் பிரதமர் கொடுத்த நெருக்கடி காரணமாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்பதால் உச்சநீதிமன்றமே தலையிட்டது. அதன் பேரில் சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்து ராசாவை கைது செய்தது.
இந்த முறைகேட்டில் கனிமொழிக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. கூறியதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை வேகமாக நடந்து வருகிறது. வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பிரதான வழக்கு வேகமாகச் சென்றுகொண்டிருக்க, மற்றொரு வழக்கான கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கைமாறிய விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது (கனிமொழி கைது செய்யப்பட்டது, இந்த விவகாரத்தில்தான்).
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றதற்கு ஆதாயமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 200 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியது. இந்தப் பணம் வெவ்வேறு நிறுவனங்கள் வழியாக கைமாற்றி கடைசியாக கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்டது. அதாவது கடன் வடிவிலும், பங்குகள் வாங்குவது என்ற போர்வையிலும் சட்டப்பூர்வமாக தோன்றும் வகையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.
ஆனால், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிச்சத்துக்கு வந்து விசாரணை தொடங்கியபோது, கிடைத்த பணத்துக்கு கூடுதலாக வட்டியும் சேர்த்து, 233.44 கோடி ரூபாயை வாங்கிய வழியிலேயே திருப்பிக் கொடுத்து, அதைச் சட்டப்பூர்வ பரிவர்த்தனையாக கலைஞர் டிவி காட்டிக்கொண்டது.
அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதில் 200 கோடி ரூபாய் கைமாறியதில் ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மற்றும் 9 நிறுவன உரிமையாளர்கள் வகையாக மாட்டிக்கொண்டனர். இவர்களில் தயாளு அம்மாளை சி.பி.ஐ. சாட்சியாக சேர்த்துக் கொண்டது. கலைஞரின் நீண்டகால அரசியல் வாழ்க்கைக்கு கிடைத்த வெகுமதி அது.
இந்த விவகாரத்தில், மொத்தம் 19 பேர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை டில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவின் தன்மை குறித்து சிபிஐ நீதிமன்றம் வரும் 30ம் தேதி பரிசீலிக்க இருக்கிறது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
200 கோடி ரூபாய் கைமாறிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தி.மு.க.வுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக ஜெயலலிதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக ஜெயலலிதா மீது குற்றம்சாட்டி வரும் கருணாநிதி, இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர வேண்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கைமாறிய விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது தி.மு.க.வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, 2 ஜி ஸ்பெக்ட்ரம் மெயின் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கனிமொழி, ராஜா உட்பட வழக்கில் தொடர்புடைய 17 பேர் மே 5-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக கண்டிப்பாக வாக்குமூலம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும், அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளின் முகங்களில் முழுமையான ஆனந்தத்தை பார்க்க முடியாது!