வித்யாவின் கதை இன்னொரு மாதிரியானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்ட நிலையில் அவள் கதிகலங்கிப் போய் இருந்தாள்.
மணப்பெண்ணுக்குரிய மகிழ்ச்சி அவள் முகத்தில் தென்படவில்லை. பெற்றோர் பலமுறை கேட்டும் எந்த பதிலும் சொல்லவில்லை. அவளுடைய நெருங்கிய தோழி அவளை தனியே அழைத்து விசாரித்தாள்.
வித்யாவோ அம்மா, அப்பாவை விட்டு பிரிந்து போக கவலையாக இருக்கிறது என்றாள். தோழி அதை நம்பவில்லை.
அவள் எதையோ மறைக்க முயற்சிப்பது புரிந்தது. எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல். நான் தீர்வு சொல்கிறேன் என்று ஆறுதலாக பேசினாள்.
அப்போது தயக்கத்தில் இருந்து விடுபட்ட வித்யா, ‘முதலிரவை நினைத்து பயப் படுகிறேன்’ என்றாள்.
அப்படி என்ன பயம் என்று தோழி கேட்டபோது கண்ணீர் விட்டு அழுதபடி, அறியாத வயதில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிட்டாள். ‘என்னவென்றே தெரியாத வயதில் நிகழ்ந்து விட்ட தவறுக்கு தான் காரணம் இல்லை என்றாலும் அது அடிக்கடி மனதுக்குள் வந்து காயப் படுத்துகிறது.
அதனால் முதலிரவை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்படி திருமணத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவது?’ என்று கேள்வி எழுப்பியவள், ‘எனக்கு உறுத்தலாகவும், பயமாகவும் இருக்கிறது.
என்னை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டால் என் கணவர், என் குடும்பத்தை பற்றியும் கேவலமாக நினைத்து விடுவார்’ என்று கதறியழுதாள்.
அவளுக்கு ஆறுதல் சொன்ன தோழி, ‘நீ அவசரப்பட்டு முடிவெடுத்து வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதே.
இந்த மாதிரியான பாலியல் பாதிப்புகள் பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதில் ஏற்பட்டிருக்கிறது.
எனக்குகூட நடந்திருக்கிறது. நான் அதை கெட்டகனவாக நினைத்து மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு. அதை திரு மணத்திற்கு பின்பு உன் கணவரிடம் சொன்னால் தேவையற்ற பிரச்சினைதான் ஏற்படும்’ என்று சரியான முறையில் விளக்கம் கொடுத்தாள்.
வித்யாவிற்கு நடந்தது என்னவென்றால், தனது பள்ளிப்பருவத்தின் இறுதிக்காலத்தில் அவள் தனது தோழனுடன் தகாத உறவில் ஈடுபட்டுவிட்டாள்.
அதன் பின்பு தன்னை திருத்தி, அந்த உறவுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டாலும், தான் உறவு கொண்டது வருங்கால கணவருக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சம்தான் அவளை வாட்டிவதைத்ததற்கான காரணம்!
இதுபோல பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக ஆக்கிவிடுகிறது.
மகளை திருமணத்திற்கு தயார் செய்யும் பெற்றோர், முதலில் அவளது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கணிக்கவேண்டும்.
அதில் அலட்சியம்காட்டக் கூடாது. தேவைப்பட்டால் அதற்குரிய கவுன்சலிங்கை பெறவேண்டும்.
அவளது மனதில் இருக்கும் குழப்பங்களை அகற்றிவிட்டு, அதன் பின்பு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தால்தான், முதல் இரவு மட்டுமின்றி எல்லா இரவுகளும் இனிக்கும்.
திருமணத்துக்கு முன்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டாலும் அதை மனதில் இருந்து தூக்கிப் போட்டு விட்டு இனி வரும் வாழ்க்கையை நேர்மையாக வாழும் மனப் பக்குவத்தை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தவறுகள் யாரும் தெரிந்து செய்வதில்லை. அதை தாண்டி வர பழகிக்கொள்ள வேண்டும். தான் ஒரு நேர்மையான நல்ல மனைவி என்று பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலிரவில் வேண்டாத விஷயங்களை கணவரிடம் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
ஒருவேளை அது கடைசிகாலம் வரை தீர்க்க முடியாத சிக்கலை உருவாக்கி விடும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் வாட்டி வதைத்து கசப்பாக்கி விட அனுமதித்துவிடக்கூடாது.
ஆய்வுகள் சொல்வதுபோல் முதலிரவு இனிக்காவிட்டாலும், அடுத்தடுத்து வரும் அனைத்து இரவுகளையும் இன்பமயமானதாக ஆக்க கணவனும்- மனைவியும் மனம்விட்டுப்பேசி, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். நம்பிக்கையும் கொள்ளவேண்டும்.