ராஜிவ் கொலை வழக்கில் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு கடந்த 1998ம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
பின்னர் கடந்த 2000ம் ஆண்டு, இந்திய அரசியலமைப்பு சட்டம் 161ன் படி, நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது தமிழக அரசு.
இந்நிலையில் தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த 2,200 ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்தது.
இதைத் தொடர்ந்து நன்னடத்தையின் கீழ் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள தன்னையும் விடுதலை செய்ய கோரிக்கை வைத்திருந்தார் நளினி.
இந்த மனு மீதான விசாரணையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் உங்களை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று தனி நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் நளினி, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.