முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகள் துலாஞ்சலி ஜயக்கொடி, போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் கடந்த 25 ஆம் திகதி செவ்வாயன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் (சி.ஐ.டீ) விசாரணைக்குட்படுத்தப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
எவ்வாறாயினும் அவருக்கு சுமார் 2மில்லியன் ரூபா பெறுமதியான அந்த போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வழங்கியதாக கூறப்படும் பிரதான சந்தேக நபரான ஹிக்கடுவ ஆராச்சிகே பிசாந்த ரோலின் பெரேரா என்பவரை புலனாய்வுப் பிரிவினர் அன்றைய தினம் இரவே கைது செய்ததுடன்…
..மறு நாள் 26 ஆம் திகதி புதன்கிழமை புதுக்கடை முதலாம் இலக்க நீதிவான் நீதிமன்றில் நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தி விளக்க மறியலில் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கடந்த செவ்வாயன்று பிற்பகல் 2.17 மணிக்கு (சீ.சீ.ரீ.வியில் பதிவான காட்சிகளுக்கு அமைய)துலாஞ்சலி ஜயக்கொடி கறுவாத்தோட்டம், மெய்ட்லன்ட் கிரஸன்ட் பாதை பகுதியில் உள்ள எச்.எஸ்.பீ.சீ. வங்கிக்கு சென்றுள்ளார்.
அந்த வங்கியின் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளரான துலாஞ்சலி, இரண்டு மில்லியன் ரூபா உள்ளதாகவும் அதனை ஜோன் கீல்ஸ் நிறுவன கணக்கில் வரவு வைக்குமாறும் குறிப்பிட்டு வங்கி சேவை உத்தியோகத்தரான நிரோஷா கன்னங்கரவிடம் கையளித்துள்ளார்.
இதனை அடுத்து அப்பணத்தொகை யினை துலாஞ்சலீ ஜயக்கொடியுடன் சென்று காசாளர் ஹர்ஷ என்டனியிடம் நிரோஷா கையளித்துள்ளார். இதன்போது வைப்பிலிட கொடுக்கப்பட்ட 5000 ரூபா நோட்டுக்கள் போலியானவை என்பதை காசாளர் ஹர்ஷ என்டனி அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேற்பார்வை முகாமையாளரான நத்தாலி வெரோனிகாவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதனை அடுத்தே விடயம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் கடந்த 26 ஆம் திகதி நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் டீ.ஏ.நலின் பிரியதர்ஷனவினால் முன்வைக்கப்பட்டன.
குற்றப் புலனாய்வுப் பிரிவில் இந்த போலி 5000 ரூபா நோட்டு தொடர்பில் முறையிட்ட கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள குறித்த தனியார் வங்கியின் உதவி முகாமையாளர் ரஜித் டிரஞ்சன் ரணவீர துலாஞ்சலி வழங்கிய பணத்தில் 5000 போலி நோட்டுக்கள் 403 இருந்ததாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலி நாணயத்தாள்கள் தொடர்பான விஷேட விசாரணைப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.அம்பாவில தலைமையிலான பொலிஸார் கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள குறித்த தனியார் வங்கிக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன் துலாஞ்சலி ஜயக்கொடியை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து வந்து விஷேட விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
உண்மையில் துலாஞ்சலி ஜயக்கொடி வழங்கிய நோட்டுக்களை வைப்பிலிட எண்ணுவதற்காக காசாளர் குறித்த இயந்திரத்தில் வைத்த போதே அவை போலியானவை என்பதை உணர்ந்துள்ளார். இதனை அடுத்தே மேல் நிலை அதிகாரிகளின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் துலாஞ்சலியையும் வங்கி பாதுகாப்பில் வைத்துக்கொண்டே பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்தே உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.அம்பாவில தலைமையிலான குற்றப் புலனாய்வுப் பிரிவினர் போலி நாணயத்தாள் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகள் குழு அங்கு சென்றுள்ளது.
இதனிடையே துலாஞ்சலி ஜயக்கொடி தனக்கு குறித்த பணத்தொகையை வழங்கியவர் எனக் கூறப்படும் ரோலின் பெரேராவை (தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்) தனது கையடக்க தொலை பேசியில் அழைத்துள்ளார். இதன் போது அந் நபரிடம் அவர் வழங்கிய பணம் போலி நோட்டுக்கள் என துலாஞ்சலி குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து ரோலின் பெரேரா 20 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையுடன் அந்த வங்கிக்கு உடன் வந்துள்ளார். அவரின் வருகையும் வங்கி சீ.சீ.ரீ.வீ.கண்காணிப்பு கமராவில் துல்லியமாக பதிவாகியுள்ளது.
அவர் கொண்டுவந்த காசோலையானது வேறு ஒரு வங்கியின் காசோலை எனவும் அது செலான் வங்கிக் கணக்கை உடையது எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
இவ்வாறு காசோலையுடன் வந்த போதே பொலிஸார் சந்தேக நபரை வங்கிப் பிரதேசத்தில் வைத்தே கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சந்தேக நபரை கைது செய்யும் முன்னரேயே துலாஞ்சலி ஜயக்கொடியை குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றிருந்த பொலிஸார் அங்கு வைத்து அவரிடம் நீண்ட நேர விசாரணைகளை தொடர்ந்திருந்தனர்.
கடந்த செவ்வாய் இரவு 7.30 மணியினையும் தாண்டி நீடித்த விசாரணைகளை தொடர்ந்து அவரிடம் விஷேட வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொண்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண வழங்கிய தகவல்களின் பிரகாரம் , துலாஞ்சலி ஜயக்கொடி போலி நோட்டுக்கள் என்று தெரியாமலேயே குறித்த பணத்தொகையினை வைப்புச் செய்ய சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாகவும், திட்டமிட்டு குற்றமொன்றினை அரங்கேற்றும் நோக்குடன் அவர் அங்கு செல்லவில்லை என்பது தெளிவானதை அடுத்தே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாமலேயே அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.
உண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துலாஞ்சலியிடமும் ரோலின் பெரேராவிடமும் வெவ்வேறாக விசாரணைகளை மேற்கொண்ட பின்னரேயே துலாஞ்சலியை விடுவித்துள்ளனர்..
நிறுவனம் ஒன்றில் தான் இட்டிருந்த மூலதனத்துக்கு உரிய இலாபம் எனக் கூறி 2 மில்லியன் ரூபாவை ரோலின் பெரேரா தனக்கு வழங்கியதாக துலாஞ்சலி தனது வாக்கு மூலத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சந்தேக நபரான ரோலின் பெரேரா கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கடந்த செவ்வாயன்று காலை அந்த பணத் தொகையினை துலாஞ்சலியிடம் தானே வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சந்தேக நபரான ரோலின் பெரேரா , துலாஞ்சலி ஜயக்கொடியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என குறிப்பிடப்படுகிறது.
வங்கியில் வைத்து 2 மில்லியன் ரூபா இருப்பதாக கூறியே துலாஞ்சலி இந்த போலி நாணயத்தாள்கள் அடங்கிய உறைகளை வைப்புச் செய்ய கையளித்துள்ளார்.
எனினும் அதில் 2 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் 15000 ரூபா பெறுமதியான போலி நோட்டுக்கள் இருந்துள்ளன.
இதனால் துலாஞ்சலி, ரோலின் பெரேரா வழங்கிய பணத்தொகையினை எண்ணிக்கூடப் பார்க்காமலேயே வங்கியில் வைப்புச் செய்ய சென்றுள்ளார் என்பது புலனாவதாகவும் அவர் போலி நாணய தாள்கள் என அதனை அறிந்திருக்கவில்லை என்பதும் இதன் மூலம் தெரிவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவிக்கிறார்.
இதனை விட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துலாஞ்சலியின் வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
துலாஞ்சலி அந்த பணத்தொகையினை வைப்பிலிடச் சென்ற நிறுவனத்துக்கு பல மாதங்களாக பணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளமையும் தனக்கு கிடைத்த முதலீட்டு இலாபம் ஒன்றினை கொண்டு அதனை மீள செலுத்த முற்பட்டுள்ளமையும் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இந்த விடயங்களின் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்த விடயங்களே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
அதாவது துலாஞ்சலிக்கு அந்த போலி நாணயத்தாள்களை வழங்கிய குறித்த ரோலின் பெரேரா எனப்படும் நபர் ஒரு ஆடை தொழிற்சாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் என்பது முதலில் பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவரது முகாமைத்துவ உத்தியோகத்துக்கு மேலதிகமாக போலி நோட்டு அச்சிடும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான தகவல்களை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கடந்த புதன் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெளிவு படுத்தியிருந்தார்.
புதனன்று காலை சந்தேக நபரான ரோலின் பெரேராவின் இலக்கம்29/ சீ, பாடசாலை வீதி, மஹிந்தாராம வீதி, எத்துல் கோட்டே என்ற முகவரியில் உள்ள வீட்டினை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விஷேட சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன் போது பொலிஸாருக்கு இந்த போலி நோட்டு வியாபாரத்தில் மேலும் பல விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ள முடிந்தது.
சந்தேக நபரின் வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் அங்கிருந்து 21 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நோட்டுக்களை மீட்டுள்ளனர்.
424 போலி 5000 ரூபா அங்கு இருந்துள்ளதுடன் அதனை அச்சிட பயன்படுத்தியதாக கூறப்படும் அச்சு இயந்திரம், நாணயத்தாள்களை வெவ்வேறாக வெட்டியெடுக்க பயன்படுத்தப்படும் இயந்திரம்,போலி நாணயத்தாள்கள், மடிக்கணினி, டொங்கல் ஒன்று ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஆடை தொழிற்சாலை ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளர்களில் ஒருவர் என சந்தேக நபரை அடையாளப்படுத்தும் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வசிப்பதாக குறிப்பிட்டனர்.
அத்துடன் இங்கிலாந்தில் கல்வியினை தொடர்ந்துள்ள குறித்த சந்தேக நபர் 1996 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் இருந்துள்ளார்.
முகாமைத்துவம் தொடர்பில் டிப்ளோமா சான்றிதழை இவர் பெற்றுள்ளதுடன் 2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த அவர் மீண்டும் இலங்கையில் பல்வேறு வர்த்தக முயற்சிகளுடன் தொடர்பு பட்டு வந்துள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பட்ட பின்னர் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த போலி நாணயத்தாள் விவகாரம் குறித்தான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எப்.எம்.பஸீர் படங்கள்: ஜே.சுஜீவ குமார்