கல்முனை மாநகர சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உறுப்பினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாக கல்முனை மாநகர சபையிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று மாலை நடைபெற்றது
இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை பின்னர் கைகலப்பாக மாறியிருந்தது.
இதன்போது பலத்த காயமடைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர், கல்முனை அஷ்ரப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்முனை மாநகர சபையில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 11 அங்கத்தவர்கள் உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக 3 உறுப்பினர்கள் சபையில் இருப்பதுடன், இவர்கள் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
கல்முனை மாநகர சபையின் எதிர்கட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய இலங்கை செய்திகளை பார்வையிடுங்கள்..