போரின் வலி என்னவென்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டாம் உலகப்போரின் எச்சங்களாகவும், அதன் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியங்களாகவும் உள்ள ஹிரோசிமாவும், நாகசாகியும் இன்றும் உலகுக்குப் போரின் வலி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
சமீப காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் நடந்த போர்களின்போது இடம்பெற்ற மோதல்களும் தாக்குதல்களும் அந்தந்த நாடுகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இத்தகைய சூழலில்தான் நாஸ்ட்ரடாமஸ் சொன்ன ஜோதிடத்தின் படி 2018 ல் மூன்றாவது உலகப்போர் மூண்டுவிடுமோ, அதற்கான தீயை ‘ஆசியாவின் ஹிட்லர்’ என்று பிறநாட்டு தலைவர்களால் அழைக்கப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூட்டிவிடுவாரோ என உலக நாடுகள் பதை பதைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
வடகொரியாவிலும் அமெரிக்காவிலும் அதிபர் பதவியில் இருக்கும் இரு தலைவர்களின் முதிர்ச்சியற்ற பேச்சுகள் மற்றும் நடவடிக்கைளைப் பார்க்கும்போது, ” நான்தான் அப்பவே சொன்னேன்ல…பாருங்க என்ன நடக்கப்போகுதுன்னு…” என்று நாஸ்டர்டாம் தனது கல்லறைக்குள் இருந்து கெக்கலிப்புடன் சொல்வது போன்றே இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டாம் போருக்கு ஹிட்லர்தான் முக்கிய காரணம் என்று எப்படி குற்றம் சாட்டப்பட்டாரோ அதேப்போன்றுதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ஆசிய ஹிட்லராக பார்க்கப்படுகிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
அமெரிக்காவை அலறவைக்கும் ஏவுகணைச் சோதனை
பகை நாடான தென்கொரியாவுக்கு ஆதரவளிப்பதால், அமெரிக்கா மீது விரோதம் கொண்டுள்ள வடகொரியா, சர்வதேச நாடுகளின் கண்டனம், ஐ.நாவின் தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து அணு ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது.
குறிப்பாக ஜப்பான் மற்றும் அமெரிக்காவை குறிவைத்து அந்த நாடு இந்த அணு ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் மிரட்டலுக்குப் பதிலடி கொடுப்பதற்காக கடந்த ஆண்டு மத்தியில் தென் கொரியாவுடன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் கூட்டாக போர் பயிற்சி மேற்கொண்டது.
இது வட கொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் இறுதியில், வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை மேற்கொண்டது.
இந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள ஹோக்கைடோ பகுதி வானில் சுமார் 14 நிமிடங்கள் பறந்தது.
ஜப்பான் கடல் பகுதியில் இருந்து 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. விழுவதற்கு முன்பாக ஏவுகணை மூன்று பாகங்களாக வெடித்து சிதறியது.
இந்த ஏவுகணை அமெரிக்காவின் குயாம் தீவை எளிதில் சென்று தாக்கும் திறன் படைத்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் இறுதிவாக்கில் அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஹவாசாங்-15 ரகம்) ஏவி சோதித்தது வடகொரியா.
அந்த நாடு இதுவரை ஏவி சோதித்த அத்தனை ஏவுகணைகளையும் மிஞ்சுகிற விதத்தில் இந்த ஏவுகணை, 4 ஆயிரத்து 475 கி.மீ. உயரத்துக்கு செங்குத்தாக பாய்ந்து, 53 நிமிடங்களில் 960 கி.மீ. தொலைவுக்கு பறந்து, ஜப்பான் கடலில் விழுந்தது.
இதனையடுத்து மாபெரும் வெற்றிக் கொண்டாட்டத்தை வடகொரியா நடத்த, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் அதிர்ந்துபோயின.
நிலைமை இதேரீதியில் போனால் என்ன செய்வது என்று ஐ.நா. சபையும் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு நின்றது.
இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்க உருவாக்கியது.
ஐ.நா. தடையும் அணு ஆயுத பட்டன் மிரட்டலும்
இந்த தீர்மானத்தின்மீது கடந்த டிசம்பரில் ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தியது. இதற்கு வடகொரியாவின் நேச நாடுகளான சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.
இந்த வாக்கெடுப்பின்மூலம் வடகொரியாவுக்கு 90 சதவிகித பெட்ரோல் இறக்குமதி குறைக்கப்படுகிறது. இதனையடுத்து, தங்கள் நாட்டின் மீதான ஐ.நா.வின் பொருளாதார தடைகள் போருக்கான நடவடிக்கையாகவே இருக்கும் என்று கூறிய கிம் ஜாங், இந்த பொருளாதாரத் தடை கொண்டுவரப்படுவதற்கு காரணமாக அமைந்த அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.
புத்தாண்டு அன்று, “எனது மேஜையின் மீது இருக்கும் அணு ஆயுத பட்டனை அமுத்தினால் அமெரிக்கா க்ளோஸ்…” என கிம் ஜாங் மிரட்டல் விடுக்க, பதிலுக்கு அமெரிக்க அதிபர் டொனா;டு ட்ரம்பும், ” எங்கள் கை என்ன புளியங்காய் பறித்துக் கொண்டிருக்குமா…? எனது மேஜையிலும்தான் அணு ஆயுத பட்டன் உள்ளது.
அழுத்தினால் வடகொரியா இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்…’ என பதிலடி கொடுக்க, ” அடக் கஷ்டக் காலமே…!’ என அன்றிலிருந்தே அமெரிக்க மற்றும் வடகொரிய மக்கள் மட்டுமல்லாது உலக நாடுகளே தலையில் கை வைத்தபடி, இன்னும் என்னென்ன மிரட்டல்களெல்லாம் இந்த இரு தலைவர்களிடமிருந்து வரப்போகிறதோ என்று பார்க்கத் தொடங்கினர்.
இந்த நிலையில்தான் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ, ” அணு ஆயுதம் மூலம் அமெரிக்கா மீது வட கொரியா இன்னும் சில மாதங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என கவலை தெரிவித்து அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்புக்கு ‘நோட்’ போட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், அமெரிக்கர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
ஏனெனில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கேரக்டர் அப்படி. கடந்த காலங்களில் மட்டுமல்லாது இப்பொழுதும் அவ்வப்போது அவர் விடுக்கும் கோக்குமாக்குத் தனமான மிரட்டல்கள், அவர் ஸ்திரமான மன நிலையில்தான் உள்ளாரா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு உள்ளது என்பதால், இந்த மனுஷன் வில்லங்கமாக ஏதாவது செய்து தொலைத்தால் என்னாவது என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா ஒருபுறம் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்க, கிம் ஜாங், அமெரிக்கா மீது ஏவுகணையை ஏவும் அதே சமயத்தில் ஏற்கெனவே எதிரிகளாக பார்த்துக் கொண்டிருக்கும் தங்கள் மீதும் ஏவ சாத்தியம் உள்ளதே என வடகொரியாவின் அண்டை நாடுகளான தென்கொரியாவும் ஜப்பானும் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறன.
அதே சமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பதில் தாக்குதலோ அல்லது முன்கூட்டியே தற்காப்பு தாக்குதலோ நடத்தினால் தங்கள் கதி என்னவாது என ஏற்கெனவே கிம் ஜாங்கின் கிறுகிறுக்க வைக்கும் நடவடிக்கைகளால் நொந்து நூலாகித் தவிக்கும் வடகொரிய மக்களும் கடவுளை வேண்டியபடி கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாம் உலகப் போர்… அபாய சங்கை ஊதிய அமெரிக்க உளவுத் துறை
“வடகொரியா அச்சுறுத்தலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காமல் ராணுவ நடவடிக்கை எடுத்தால் எவ்விதமான பிரச்னைகள் ஏற்படும் என்பதை அதிபர் ட்ரம்ப்புக்குத் தெரிவித்துள்ளோம்.
வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், கொரிய தீபகற்ப பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் மனித இழப்புகள் மிக மோசமான அளவில் இருக்கும்.
அதிபர் கிம்மை பதவியில் இருந்து அகற்றினாலோ அல்லது அமெரிக்கா மீது அணுஆயுதம் ஏவும் திறனை கட்டுபடுத்தினாலோ என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
இன்னும் சில மாதங்களில் அமெரிக்கா மீது அணு ஆயுதம் மூலம் வடகொரியா தாக்குதல் நடத்தலாம். இது கவலை அளிக்கிறது. வடகொரிய அதிபர் பற்றி கடுமையான வார்த்தைகளை அதிபர் டிரம்ப் உபயோகிக்கிறார். ஆனால் அது வடகொரியாவின் காதில் விழவில்லை.
இந்த வார்த்தைகள் மூலம் அமெரிக்கா மிகவும் கோபமாக உள்ளது என்பதை கிம் ஜாங் உன் புரிந்து கொள்ள வேண்டும்” என அமெரிக்க உளவுத் துறைத் தலைவர் மைக் பாம்பியோ அளித்துள்ள பேட்டி நிலைமை எந்த அளவுக்கு சீரியஸாக உள்ளது என்பதை உணர்த்துகிறது.
ஏற்கெனவே சீனா, வடகொரியாவுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொள்கிறது. இந்த நிலையில் பல ஆண்டு காலமாக அடங்கியிருந்த ரஷ்யா – அமெரிக்கா இடையேயான பனிப்போர் தற்போது வெளிப்படையாகவே மோதலாக வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், வடகொரியாவுக்கு எதிரான பொருளாதார தடைக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தபோதிலும், மறைமுக அவ்விரு நாடுகளும் வடகொரியாவை ஆதரித்துக் கொண்டுதான் உள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க உளவுத் துறை கவலை தெரிவித்துள்ளபடி வடகொரியா – அமெரிக்கா இடையே போர் மூண்டால் அதனால் ஏற்படுகிற பாதிப்புகள் அவ்விரு நாடுகளுடன் மட்டும் நிற்காது.
வடகொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவிக்கும். அதேபோன்று அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் இதர நேச நாடுகளும் களம் இறங்கும்பட்சத்தில் அது நிச்சயம் மூன்றாவது உலகப்போருக்கு வித்திடும்.
இந்த நிலையில் இந்த அளவுக்கு அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டு, அதன்மூலம் பிற உலக நாடுகளுக்கும் மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை காட்டிக்கொண்டிருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார், இருபத்தோராம் நூற்றாண்டின் ஆசிய ஹிட்லர் என்று அழைக்கப்படும் அளவுக்கு கிம் ஜாங் ஹிட்லரின் குணாதிசியங்களுடன் ஒத்துப்போகிறாரா, அவரின் ஜாதகம் என்ன, அவர் அதிபரானது எப்படி, வடகொரியாவின் கடந்த கால வரலாறு , தென்கொரியாவுடன் என்ன பிரச்னை, இரண்டு கொரிய நாடுகளும் பிரிந்தது ஏன், அமெரிக்கா – வடகொரியா இடையே எதனால் மோதல் தொடங்கியது,போர் மூண்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும், தனது அரசியல் எதிரிகளையும் ராஜ துரோகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் கிம் ஜாங் எத்தகைய சித்ரவதைக்கு உள்ளாக்குவார் அல்லது கொடூரமாகக் கொல்வார் என்பதை அருகிலிருந்து பார்த்த முன்னாள் சிறை அதிகாரிகள் சொல்லும் மரண முகாம்கள் குறித்த பகீர் தகவல்களையும், உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளையும் மீறி வடகொரியா எப்படி பொருளாதார ரீதியில் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், சீனா ஏன் வடகொரியாவுக்கு ஆதரவாக உள்ளது, இந்த இரண்டு நாடுகளுடன் ரஷ்யாவும் கைகோத்தால் அது அமெரிக்காவுக்கு வருங்காலத்தில் எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் வரும் அத்தியாயங்களில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்….