நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என பல்வேறு ஊடகங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றபோதிலும், அது உண்மையாகும் பட்சத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி அதிமுக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசு என்பது சாத்தியமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தொடங்கியபோது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து ‘நாளை நமதே…நாற்பதும் நமதே…!’ என்ற கோஷத்துடன் அதிமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
அத்துடன் 40 இடங்களையும் அதிமுக கைப்பற்றி ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் போகுமிடமெல்லாம் பேசிவந்தனர்.
தம்மை பிரதமர் பதவி ரேஞ்சுக்கு உயர்த்தி தமது கட்சியினர் பிரசாரம் செய்வதையும், ஆங்காங்கே கட் அவுட்கள், பிளக்ஸ் பேனர்கள் போன்றவற்றை வைப்பதையும் ஜெயலலிதா உள்ளூர ரசித்தாலும், வெளிப்படையாக அவர் தனது தேர்தல் பிரசாரத்தில் தாம் பிரதமர் ஆவேன் என்று எங்கும் கூறவில்லை.
அதே சமயம் மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமைந்தால்தான், மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும், தமிழகத்திற்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டுவர முடியும் என்றும் கூறி மக்களிடம் வாக்குகள் கேட்டார்.
இந்நிலையில் பிரசாரம் தொடங்கியதிலிருந்து சுமார் ஒரு மாத காலத்திற்கு பா.ஜனதாவையோ அல்லது மோடியையோ ஜெயலலிதாவோ அல்லது அதிமுக பேச்சாளர்களோ விமர்சிக்காமல்தான் இருந்துவந்தனர்.
இதனை திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் சுட்டிக்காட்டி, தேர்தலுக்கு பின்னர் பா.ஜனதா கூட்டணியில் ஜெயலலிதா இடம்பெறுவார் என்று பிரசாரம் மேற்கொண்டனர்.
இதனால் அதிமுகவுக்கு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகள் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சம் அடைந்தார் ஜெயலலிதா.
இதன் காரணமாகத்தான் தேர்தல் பிரசாரம் முடிவடைகிற தருவாயில் பா.ஜனதாவையும், மோடியையும் திடீரென தாக்கிப்பேசத் தொடங்கினார் ஜெயலலிதா. இதனால் பா.ஜனதாவினரும் பதிலடி கொடுத்து பிரசாரம் மேற்கொண்டனர்.
இவ்வாறு இருதரப்பும் மோதிக்கொண்டதால், அதுவரை அதிமுக – பா.ஜனதா இடையே நிலவி வந்த ஒரு இணக்கமான சூழல் காணாமல் போனது.
இருப்பினும் தேர்தலுக்கு பின் அறுதிப்பெரும்பான்மைக்கு குறைவான இடங்களை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும்பட்சத்தில், அக்கூட்டணியை ஆதரிக்க ஜெயலலிதா தயங்கமாட்டார் என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்தே இருந்தனர்.
அதே சமயம் ஜெயலலிதாவுக்குள் இருந்த பிரதமர் ஆசையும் அடங்கிவிடவில்லை. தேர்தல் பிரசாரத்தின் ஊடே, ஜெயலலிதா பிரதமராக விரும்பினால் அதற்கு தான் முழு ஆதரவு தர தயாராக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியதும், அவரை உடனடியாக அவரை தொடர்புகொண்டு பேசி நன்றி தெரிவித்தார் ஜெயலலிதா.
இதனிடையே பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றி, பா.ஜனதா கூட்டணிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால், ‘மத்தியில் மதவாத பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க’ என்ற காரணத்தை முன்வைத்து மூன்றாவது அணி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்கக்கூடும் என்ற பேச்சும் எழுந்தது.
இதனை உறுதிப்படுத்தும்விதமாக காங்கிரஸ் கட்சியும் சில ரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கும் மூன்றாவது அணி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்கலாம் என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது.
இந்நிலையில்தான் நாடாளுமன்றத்திற்கான 9 வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று மாலை முடிவடைந்த உடன், வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் நடத்திய பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இதில் அனைத்து கருத்துக்கணிப்புகளிலுமே பா.ஜனதா கூட்டணி அறுதிப்பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களை, அதாவது சுமார் 260 முதல் 280 வரையிலான இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது.
அதேப்போன்று தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவினர் பிரசாரம் செய்தபடி 40 க்கு 40 என்ற அளவில் இல்லாவிட்டாலும் 20 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றக்கூடும் என அந்த கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டிருந்தது.
இந்த கருத்துக்கணிப்பு சாத்தியமாகி, அதிமுக அதிக இடங்களை கைப்பற்றினாலும், அக்கட்சிக்கு மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் சாத்தியக்கூறுகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏனெனில் அதிமுக ஆதரவை கேட்டு பெறும் அவசியம் ஏற்படாதவகையில் பா.ஜனதா கூட்டணி, அறுதிப்பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களை கைப்பற்றிவிடும் என்றே கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியை தாக்கி ஜெயலலிதா மேற்கொண்ட பிரசாரம், பா.ஜனதாவில் உள்ள மோடி ஆதரவு தலைவர்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கடந்த வாஜ்பாய் ஆட்சியின்போது அதிமுக ஆதரவை பெற்றதற்காக, ஜெயலலிதா பாடாய்படுத்தியதையும் நினைவுக் கூறும் அவர்கள், அதிமுக ஆதரவை பெற்று அக்கட்சியை மத்திய அமைச்சரவைக்குள் சேர்த்துக்கொள்வது என்பது வெண்கலக்கடைக்குள் யானை புகுந்த கதைதான் என்ற எண்ணமும் அவர்களுக்கு உள்ளது.
இதுதவிர தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ, ராமதாஸ் மற்றும் விஜயகாந்த் ஆகியோரும், அதிமுகவை பா.ஜனதா கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள எதிர்ப்பை தெரிவிக்கக்கூடும். அதே சமயம் இவர்களது எதிர்ப்பு எந்த அளவுக்கு பா.ஜனதாவினரால் மதிக்கப்படும் என்பது தேர்தலில் அவர்கள் பெறுகிற இடங்களை பொறுத்துதான் அமையும்.
தற்போதைய கருத்துக்கணிப்புகளை பார்த்தால் வைகோவின் மதிமுக, ராமதாஸின் பாமக மற்றும் விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தை மட்டுமே கைப்பற்றும் எனத் தெரியவருகிறது.
மேலும் பா.ஜனதாவை ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ் தலைமைக்கு ஜெயலலிதா மீது எப்போதுமே ஒரு சாப்ட்கார்னர் உண்டு.
முந்தைய வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 2001 ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மேம்பால ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் நள்ளிரவு கைதின்போது ஏற்பட்ட கொந்தளிப்பான சூழலையடுத்து அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபோது, ஜெயலலிதா அரசை எக்காரணம் கொண்டும் கலைக்கக்கூடாது என்று வாஜ்பாய்க்கு ஆர்எஸ்எஸ் தலைமை உத்தரவிட்டதாக அப்போது செய்திகள் வெளியாகி இருந்தது.
எனவே ஓரிரு இடங்களை வைத்துள்ள மதிமுக, தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் ஆதரவை காட்டிலும் அதிக இடங்களை வைத்துள்ள அதிமுகவை அமைச்சரவைக்குள் சேர்த்துக்கொள்வது என்பது, எதிர்காலத்தில் வடமாநில கூட்டணி கட்சிகள் ஏதேனும் முரண்டு பிடிக்கும்பட்சத்தில், அப்போது கைகொடுக்கும் என்று கூறி, அதிமுகவை சேர்த்துக்கொள்ளுமாறு ஆர்எஸ்எஸ் கட்டளையிட்டால், அதனை நிச்சயம் பா.ஜனதா தலைமையினாலோ அல்லது மோடியாலோ தட்ட முடியாது.
எனவே மத்தியில் பா.ஜனதா தலைமையில் ஆட்சியமைந்தால் அதில் அதிமுக அங்கம் வகிக்குமா இல்லையா என்பதை ஆர்எஸ்எஸ்தான் தீர்மானிக்கும் என்பதை அடித்துச் சொல்லலாம்.
– பா. முகிலன்