நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தானியப் பிரதமர் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஏற்றுக் கொண்டு புதுடில்லி செல்வார் என அவரது பேச்சாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ள பாகிஸ்தானிய அரச தொலைக்காட்சி, அந்தப் பயணித்தின்போது அவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேசுவார் என செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பதவியேற்பு விழாவையொட்டி நவாஸ் ஷெரீஃப் ஒருநாள் பயணமான புதுடில்லி செல்வார் என அவரது கட்சியின் பேச்சாளர் சித்திக் அலி ஃபரூக் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணம் இந்தியப் பாகிஸ்தான் உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைக்கும் எனவும், இந்தியாவுடன் நல்லுறவை நவாஸ் ஷெரீஃப் விரும்புகிறார் எனவும் அவரது ஊடக ஆலோசகர் தாரிக் அசீம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு வருவது ஒரு “நல்ல செய்தி” என்று பாஜக பேச்சாளர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் டில்லி செல்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவின் வரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டில்லியில் கருப்புக் கொடி கண்டனப் போராட்டம் ஒன்று நடைபெறும் என மதிமுக கூறியுள்ளது.