இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தெரிவாவார் என 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுவிட்டதாக தமிழக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், ’21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும் மாற்றம் ஏற்படும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்’ என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரான்ஸ் கணிப்பாளர், தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர், மைக்கேல் டி நாம்ஸ்ட்ரடாமஸ். 1500களில் வாழ்ந்த இவர், எதிர்காலத்தில் நடக்க விருப்பதை தன் யூகத்தால் கணித்து முன்கூட்டியே எடுத்துரைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நாம்ஸ்ட்ரடாமஸ் லத்தீன் மொழியில் எழுதிய, ‘தி புரோபெசீஸ்’ என்ற புத்தகத்தில், உலகில் பல நாடுகளிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி முன்கூட்டியே எழுதி வைத்துள்ளார்.
இந்த புத்தகத்தில் முதல் பதிப்பு, 1555இல் வெளியாகியுள்ளன. இந்த புத்தகத்தை மகாராஷ்டிராவை சேர்ந்த ராமச்சந்திர ஜோஷி மராத்தி மொழியில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார். எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து நாம்ஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய அரசியலில், 21ஆம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் நிகழும்.
நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி என்ற நபர்களால் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெறும்.
வாஜ்பாய் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க மாட்டார். அத்வானி, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பார். நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பார். சிறந்த இரும்பு மனிதரான அவர், தன் சாதனைகளை எடுத்துக் கூறி மக்களின் மனதில் இடம் பிடிப்பார். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பிரான்ஸ் புரட்சி, ஹிட்லர், பல்வேறு அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் 2001இல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகிய சம்பவங்களும் இவரின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.