மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள புளியங்கண்டலடி கிராமத்திலிருந்து காணாமல்போன தனது மகள் பற்றி மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில், நேற்று 03.10.2014 வெள்ளிக்கிழமை முறையிட்டுள்ளதாக யுவதியின் தாய் கந்தசாமி தங்கநாயகம் தெரிவித்தார்.
இதுபற்றி ஏற்கெனவே வாகரைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தங்கநாயகம் மேலும் தெரிவித்தார்.
கந்தசாமி நிரோஜினி (வயது 20) என்ற தனது மகள் செப்டெம்பர் 22 ஆம் திகதி, அடகு வைத்துள்ள மோதிரம் ஒன்றை அடகு மீட்பதற்காக வாகரை மக்கள் வங்கிக்குச் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என்று தாய் கந்தசாமி தங்கநாயகம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தனது மகள் காணாமல்போன பின்னர் ஆறு அலைபேசி இலக்கங்களில் இருந்து நபர்கள் தொடர்பு கொண்டு தெளிவற்ற முறையில் பேசுவதாகவும் காணமல்போன யுவதின் தாய் கூறினார்.
அதிலொரு நபர் தான் யாழ்ப்பாணம் மானிப்பாயிலிருந்து பேசுவதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என்று யுவதியின் தாய் மேலும் கூறினார்.
இன்னொருநபர் தான் கொழும்பிலிருந்து பேசுவதாகக் கூறியதாகவும் தாய் தெரிவித்தார்.
இந்த முறைப்பாடு சம்பந்தமாக தாங்கள் விசாரணைகளை நடத்தவுள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு விசாரணை அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.