வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (25.02.2019) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் மாவாட்டத்தின் பல பகுதிகளில் மக்களும், வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு அவகாசம் வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படும் முழு அடைப்புப் போராட்டத்தால் வடக்கு மாகாணம் முடங்கியது.
இந்நிலையில் நெல்லியடி, பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வர்த்தக நிலையங்கள் பூட்டப்படுள்ளதுடன், பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை. அரச அலுவலங்கள் திறக்கப்பட்டுள்ள போதும் பணியாளர்களின் வருகை குறைவு என்பதுடன் சேவைகள் இடம்பெறவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் கிளிநொச்சியில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு மாகாணத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்புவிடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.