யாழ்., கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களுக்குள் 6 வாள் வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவை காரணமாக 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனால் மீளவும் யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டுக்கும்பல்களின் அட்டகாசம் தலை தூக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் பொது மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந் நிலைமையை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அவசியமான அதிகாரத்தை பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன் தினம் 14 ஆம் திகதி இரவு வேளையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர். மானிப்பாய் – சங்குவேலி வடக்கு பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை வெட்டுவதற்காக வாள் வெட்டுக் குழுவினர் துரத்தியுள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க வீடொன்றுக்குள் அந்த முச்சக்கர வண்டி சாரதி நுழைந்துள்ள நிலையில், அவ்வீட்டில் இருந்த, நேற்று வெளி நாடு செல்ல தயாராக இருந்த நபர்கள் மூவரை வாள் வெட்டுக் குழுவினர் வெட்டியுள்ளனர்.
அதன் பின்னர் யாழ் செல்லும் வீதியில் நின்றிருந்த நபர் ஒருவரையும், கோப்பாய் முகமடம் பகுதியில் வைத்து இருவரையும் கோண்டாவில் பஸ் நிலையம் அருகில் வைத்து மற்றொருவரையும் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதற்கு முன்னர் 13 ஆம் திகதி இரு சம்பவங்களில் நால்வர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நிலையில் விஷேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விஜித்த குணரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்த வாள் வெட்டுக்களுடன் 10 பேர் கொன்ட குழுவொன்று தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் 5 மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வாள் வெட்டு சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதா என ஆராயும் பொலிஸார் சந்தேக நபர்களை தேடி பல் முணை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.