பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்று ஒரு மாதம் தங்கியிருந்த நிலையில் வீடு திரும்பிய 34 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் குடும்பத்துடன் கடந்த 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த குடும்பத்தலைவரின் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, தொற்று கண்டறியப்பட்டவர் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்படுவதுடன் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என வைத்தியர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 70 பேருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 336 பேருக்கும் இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.