யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழக 3ஆம் வருட கலைப்பீட மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் சார்பாக எவரும் முன்னிலையாகாத நிலையில் உயிரிழந்த மாணவர்கள் சார்பாக சட்டத்தரணி தி. கணதீபன் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.