யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றுக் காலை யாழ்ப்பாணம் – மானிப்பாய், உடுவில் வீதியிலுள்ள வீடுகளிலே இந்தப் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க மையத்தினால் 1,350 இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான செயற்றிட்டத்திற்காகவே யாழ்ப்பாணத்தில் இந்தப் பதிவுகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக படைத் தலைமையகம் குறிப்பிட்டது.
இந்த செயற்றிட்டத்திற்காக நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் முறையே ஏப்ரல் 17 மற்றும் 27ஆம் திகதிகளில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தப் பதிவுகளின் போது அவற்றை மேற்கொண்ட இராணுவ அதிகாரிகள் பங்குகொண்டோரின் மூலப்பிரதிகளை திருப்பிக் கொடுக்காது தம்முடன் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிருக்கு பயந்து 10 ஈழத்தமிழர்கள் அகதியாக ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்!
05-05-2014
மீண்டும் ஈழத்தமிழர் அகதிகளாக இந்தியாவிற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில், விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்களை கைது செய்து வருவதால் உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.
தனுஸ்கோடி பகுதிகளில் இலங்கையில் இருந்து அகதிகள் வந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இவர்கள் அனைவரும் முல்லைத்தீவு யோகபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சிறுமி மீது துஷ்பிரயோகம்: சிறுவனுக்கு விளக்கமறியல்
05-05-2014
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பு கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான 18 வயது சிறுவனை எதிர்வரும் 16 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கடந்த மாதம் 27 ஆம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பாரின் வழிகாட்டலில் பெருங் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மேற்படி சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை சேனைகுடியிருப்பு கிராமத்தில் வைத்து கைதுசெய்யப்படடார்.
சிறுவனை கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது பதில் நீதிவான் எஸ்.பேரின்பராசா சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சிறுமி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றார்.