யாழ்ப்பாணத்தில், வயது குறைந்த சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக் குட்படுத்தப்படும் சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளதாக, யாழ்.போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 18 சம்பவங்கள் யாழ்.போதனா மருத்துவமனையில் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை கடந்த ஜூன், ஜூலை மாதங்களிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள யாழ். போதனா மருத்துவமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர் குணராஜா நக்கீரன், இந்த ஆண்டில் 24 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 18 வயதுகுறைந்த சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.
ஏழு பதின்ம வயது கர்ப்பங்களும் இந்த ஆண்டில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கு முன்னர் இந்தளவுக்கு வயது குறைந்த சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வின்மையே இவற்றில் பெரும்பாலான சம்பவங்களுக்கு காரணம்.
பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பான பெற்றோரின் கவனக்குறைவும் இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் சந்தேகநபர்களாக இருப்பவர்கள், யாழ்ப்பாணத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தான்.
பத்திக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.
போருக்குப் பிந்திய சூழலில் வயதுகுறைந்த சிறுமிகள் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது வழக்கமானது என்பது எமது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
அதேவேளை, வயதுகுறைந்த சிறுமிகள் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்புக்கு உறவினர்களும் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்களில் குடும்பங்களில் உள்ள வயதானவர்கள் (பேரன்) சந்தேகநபர்களாக உள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றுள்ளன.
இதனை தவிர்க்க, ஆசிரியர்கள் ஊடாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்” என்றும் குணராஜா நக்கீரன் மேலும் தெரிவித்துள்ளார்.