யாழ்ப்பாணத்தில் 14 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 760 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
19 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஐந்து பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். மற்றைய ஒருவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிலும் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரிய பயிற்சியாளர்.
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரில் இருவர் கொடிகாமம் சந்தை வியாபாரிகளும் இருவர் கொடிகாமம் வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தவர்கள்.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவன் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் இருவருக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவருக்கும் என நால்வருக்கு தொற்று உள்ளமை.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்மாவட்ட நிலைவரம்!! 12பேருக்கு தொற்று, இது வரை 19உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது
அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 1544கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்று 12பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது வரை 19உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்ட நிலைமையை ஆராய்ந்து ஒரு சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.
இதற்கு மேலதிகமாக நேற்று ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றதனடிப்படையில், தேசிய ரீதியில் மற்றும் கொவிட் தடுப்பு செயலணியின் விதிமுறைகளுக்கு அமைய, தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதில் சுகாதார வழிமுறைகளை அமுல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள், பிரச்சினைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை முறையாக அமுல்படுத்தல், அதனை பின்பற்றாத நிலைமை காணப்படுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டது.
தனிமைப்படுத்தல் நிலையங்களை தேவைக்கேற்ப அதிகரிப்பதற்குரிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
வைத்தியசாலைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக ஒக்சிஜன் நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது.
பெரும்பாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதாவது வடக்கு மாகாணத்தில் திருப்திகரமாக இருந்தாலும், அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கை எடுப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.
சகல வழிபாட்டு தலங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றவாறு ஆலயத்தில் மதகுரு மற்றும் உபயகாரருடன் மக்களின் பங்கு பற்றுதல் இன்றி ஆலய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
திருமண மண்டபங்களை பொறுத்தவரை சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்பு ஏற்கனவே தேசிய மட்ட சுகாதார வழி காட்டல்களுக்கமைய திருமண மண்டபங்களை இயங்கலாம் என்றும் ஆனால் அதற்கு முன்பாக அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்வோரின் அவருடைய பெயர் பட்டியல் உட்பட பல விவரங்களை பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்ப்பித்து உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே எந்தவொரு நடவடிக்கைக்கும் கடந்தகால அனுபவங்கள் இருக்கின்றன அவற்றை பின்பற்றி செயற்படல் நல்லது. ஆகவே பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.