யாழ் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இளம்பெண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் குருநகர் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருமணமாகி 6 மாதங்களான அன்டன் சலெஸ்ரா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சலெஸ்ரா- தனது கணவன் எதுவும் பரிசளிக்கவில்லையென வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு பின் கைகலப்பில் முடிந்துள்ளது.
பின்னர் வெளியில் சென்ற கணவன் இரவு 9 மணியளவில் வீடு வந்து பார்த்தபோது சலெஸ்ரா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சலெஸ்ராவின் கணவன் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் இன்று காலைவரை அங்கு காவலில் இருந்துள்ளனர்.
இன்று காலை யாழ்.மாவட்ட பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதைத் தொடர்ந்து சடலம் காலை 10 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை!
மலேஷியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர்.
மலேஷியாவிலிருந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள இனங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் இவர்களுக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்களெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.